Wednesday, September 25, 2024

தியாக தீபம் திலீபன்



வெள்ளி மயில் மீது உலவும்
வேலவனின் வீதியிலே
நாவரண்டு  நாவரண்டு
எங்கள் நாதமணி
பேச்சிழந்தது!

ஈழத்து வீதிகளில்

பாடித்திரிந்த குயில் 

பாரதத்து பாவிகளால்

மூச்சிழந்தது!


போர்களத்தில் 

சுழன்றடித்த

சூறாவளிக்காற்று

கண்முன்னே 

உருகி  உருகி

மெழுகுதிரியாய்

கரைந்து போனது!


பார்த்திருக்க கல்லும்

கரையும்!

காந்தி வழிப்பேரன்

கண்மூடிக்கிடந்தான்!

பார்த்தீபன் எங்களுக்கோ

புது வழியை

தந்து சென்றான்!


தமிழினம் போராடும்

ஆயுதம் இல்லாவிட்டாலும்

புல்லையும் எடுத்து அது

சதிராடும்!

அடக்குமுறைக்கு 

அது என்றும் வளையாது!

விடுதலைக்காய்

போராடும்!


ஈழத்தமிழனுக்கு 

பார்த்தீபன் 

சொல்லிச்சென்ற

புதுக்கீதை இது!


திலீபன் வயிற்றில்

பெரும் பசித் தீ இன்னும்

முளாசி எரிகிறது!

காலங்கள் கடந்தாலும்

ஆற்றமுடியா பசி இது!


விடுதலை ஒன்றே

அவன் பசி ஆற்றும்

வானத்தில் இருந்து

பார்த்தபடி  இருக்கின்றான்


நெஞ்சுக்கு நேர்மையாய்

விடுதலைப்பணி செய்

எங்கள் தியகதீபத்தின்

பசித்த வயிறாறும்!