அலை வந்து சீராட்ட
ஏலேலொ பாடி
உன் கரையில்
தானே வளர்ந்தோம்!
உன்னுள் முத்தெடுத்து
பசிக்கு மீனெடுத்து
உன் கரையில் நிலவு பார்த்து
கை வீசி நடந்ததெல்லாம்
நீ எங்கள் தாய் என்ற
உறவில் தானே கடலம்மா!
தாயாக நாம் நினைக்க
பேயாகி எம்மை ஏன் அழித்தாய்!
எங்கள் வாசல் வந்தேகிய
உப்புக்கற்றில்
நேற்றுவரை
கறையேதும்
இருந்ததில்லை.
கால் நனைத்த
நுரைகளில்,
உன் மடி பொறுக்கிய
கிளிஞ்சல்களில்
இரத்தவாடை
முகர்ந்ததில்லை
ஏன் அன்று
பேயாக மாறிப் போனாய்
எங்கள் கடலம்மா?
அன்று நீ
சங்க தமிழ் விழுங்கினாய்!
இன்று நீ
ஈழத்தமிழ் விழுங்கி
பசியாறிக் கொண்டாயோ!
காவல் தாயாய்
தேசத்தின் அரணாய்
நேற்றுவரை இருந்த நீ
இன்று ஏன்
கொலை வாளை
கையேந்தினாய்!
பூ என்றும்
பிஞ்சென்றும்
மூப்பென்றும் பாராது
அள்ளித்தின்றுவிட்டு
இயல்பாய்
இருக்க
எப்படித்தான்
முடிந்நது உனக்கு!!
காலங்கள் கடந்தாலும்
நினைவில்
நின்று அழியா
பெரும் கவலை!
மீண்டெழுவேம்!
மீண்டெழுதல் எமெக்கென்றும்
புதிதல்ல
ஒன்றாய் அரும்பி
பலவாய் விரிந்து
இவ்வுலகம்
எல்லாமுமாய்
நிற்போம்!
ஈழ தமிழனுக்கு
சாவொன்றும்
புதிதல்ல
இதையும்
கடந்து போவேம்!!!
அழித்தாலும்
மறைத்த்தாலும்
காலங்கள் கடந்து
எங்கள்
வரலாற்றின்
சாட்சியாய்
நீயே இருப்பாய்
எங்கள் கடலம்மா!