Monday, March 9, 2020

சினம் கொள்


எழில் கொஞ்சும் எங்கள் தாயகத்தை காட்சிப்படுத்திய அழகுக்காக அந்த ஒளிப்பதிவாளர்களின் திறமைக்கு முதலில் ஒரு சலூட். .... வண்ண மயமாய் நெஞ்சை இதமாய் வருடுகிறது அந்த காட்சிகள். கிளிநொச்சியில் தொடங்கி முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் யாழ்ப்பாணம் ,செம்மண் தரவைகள்  , தோட்டவெளிகள் ,கெளதாரி முனை என தாயகத்தின் அழகை ஒளிப்படக்கருவிக்குள் கையகப்படுத்திய அந்த வித்தை மிக அருமை..



எழில் கொஞ்சும் எங்கள் தேசத்தை இதற்க்கு முன் யாரும் இப்படி அழகாய் எந்த போலியும் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள்.... கொள்ளை அழகு ... 

இதற்க்காகதானே இவ்வளவு விலை கொடுப்பும்... 

அகலத்திரையில் அது விரியும் போது மனதில் பொங்கும் மகிழ்வு.... வார்த்தைகளில் சொல்ல முடியா உணர்வு அது

விடுதலைத்தீ முளாசி எரிந்த தேசம் ஒன்றின் வடுக்களை தாங்கி நிற்க்கும் இனம் ஒன்றின் வாழ்வையும் அதன் உணர்வுகளையும் சொல்லும் திரைக்காவியம் இது.



சிறையில் இருந்து விடுதலையாகி வரும் முன்னாள் புலனாய்வு பிரிவு போராளி அமுதன் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் வந்திறங்கும் காட்சியோடு ஆரம்பிக்கும் திரைக்கதை  பல கிளைகளாய் விரிகிறது ..

முன்னால் போராளி குடும்பங்கள்  வறுமையுடன் போடும் போராட்டங்கள், திடீர் காரணம் இன்றிய போராளிகளின் மரணங்கள், அந்த மரணங்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் , புலம் பெயர் முன்னாள் செயற்ப்பாட்டாளர்களின் பொறுப்பற்ற செயல்கள் , அரச அடக்குமுறைக்கெதிரான இன்றும் தொடரும் மக்கள் போராட்டம், சீரழிந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறை என பல கதைகளை தொட்டு நீள்கின்றது இந்த சினம்கொள் திரைக்காவியம்..

எத்தனை இடர்களை சந்தித்தாலும் துவண்டு விடாது நிற்க்கும் விடுதலைப் போராளிகளின் மனத்திடத்தை, தாம் நேசித்த மக்களுக்காக உருகும் போராளியாய் அமுதன், புற்று நோயால் சாகும் போதும் தன் பிள்ளைகளுக்கு உறுதிகூறும் போராளித்தாயாய் யாழினி , ஒரு கையையும் இரு காலையும் இறுதியில் மனைவியையும் இழந்து நிற்க்கும் தமிழரசன் என ஒவ்வொரு காதாப்பாத்திரமும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள் இல்லை வாழ்ந்திருக்கிறார்கள் என்று  தான் கூற வேண்டும். 

அப்படியொரு தத்துரூப நடிப்பு.

வெளி நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருக்கும் முன்னாள் விடுதலைப் போராட்ட செயற்ப்பாட்டாளரிடம் புற்று நோயால் வாடும் முன்னாள் போராளிக்கு பண உதவி கேட்க அவர் பதிலுக்குபொறுப்பு தந்தவர் வந்து கேட்க்கட்டும் திருப்பித்தாறன்எனும் அவரின் பதில் பலருக்கு சாட்டையடி....

"அண்ணையின்ட பிள்ளைகள் நாங்கள் எங்களைப்போய் ,எப்பிடி தவறாய் நினைஞ்சீங்கள்...

என்று அமுதன் தன்னை நியாயப்படுத்தும் போது ஈழத்தமிழனாய் நிமிர்கின்றோம்!.... நேர்மை என்ற அந்த ஒற்றைச்சொல்லை இதைவிட யாரும் தெளிவாய் புரிய வைக்க முடியாது.. தீபச்செல்வனின் வரிகள் அபாரம்.


எம் விடுதலைப் போராட்டத்தையோ, எம் மக்களின் கதையையோ தமிழகத் தமிழர்களால் எக்காலத்திலும் உருவாக்க முடியாது. தமிழகத்தில் இருக்கக்கூடிய படைப்பாளிக்கு அது ஒரு கதை. ஈழத்திலிருந்து வரக்கூடிய இயக்குநருக்கு அது ரத்தமும் சதையுமான வாழ்க்கை. எங்கள் சினிமாவை எங்களால்தானே உருவாக்க முடியும்.”  எனக்கூறும் இயக்குனர் ரஞ்சித்தின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை

அவர் சொன்னது போலவே ரத்தமும் சதையுமான அந்த உணர்வை கச்சிதமாய் திரையில் காட்டி இருக்கிறார்

அன்மைக்காலமாக வெளிவரும் ஈழத்து சினிமாக்கள் தென்னிந்திய சினிமாக்களின் பிரதிபலிபுக்களாகவே இருக்கின்றன. இது மிகப்பெரும் அவலம்...    இந்த போக்குகளில் இருந்து வழுவி  ஈழத்து சினிமாவை கலப்படம் இன்றி தனித்துவமான ஈழத்துக்கான  சினிமாவாக உயிர்பிக்க செய்ததில் சினம் கொள் திரைக்குழு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது எனலாம்.

படம் பார்க்கபோன சிறிய பின்னனிக்கதையுடன் இத்திரைப்படத்தின் வெற்றியை பதிவிடலாம் என நினைக்கிறேன்...

ஞாயிற்றுக்கிழமை ,மெல்பேர்னில்  உள்ள  புறநகர் ஒன்றில் மாலைக் கட்சிக்கு குடும்பமாய் சென்றோம். படம் பார்க்க செல்ல முன்னமே  எனது சின்னவன் சேரன்(7வயது)  அடம்பிடிக்கத்தொடங்கினான்... எனக்கு தமிழ்ப்படம் வேண்டாம். நான் சிறுவர்களுக்கான அன்மையில் வெளியான எதோ ஒரு ஆங்கிலப்படம் தான் பார்பேன் என ஒற்றைக்காலில் நின்றான்.. 

கடைசியாய் தியேட்டரில்  பார்த்த பிகில் தந்த பிகிலாக இருக்கலாம்...

ஒருவாறு சமாளித்து  கூட்டிப்போய் போப்கோன் வாங்கிக் கொடுத்து அவனை சமாதானப்படுத்தி  இருக்கையில் ஒருவாறு  இருந்தால்...


படம் தொடங்க அவனும் தொடங்கினான்!!   ஒவ்வொரு காட்சியிலும் சந்தேகம் கேட்க்க  தொடங்கினான்!!


ஆமிக்காரர் ஏன் சிங்களத்தில கதைக்கினம்?... 

உடைந்திருக்கும் நீர்த்தாங்கி  காட்டி அது என்ன?  அது ஏன் உடைஞ்சிருக்கு....

வற்றாப்பளை அம்மன் கோயில் காட்சியில வந்தவருக்கு , பிறகு என்ன நடந்தது...

அவருடைய குடும்பம் எங்கே?

அமுதனின் சொந்த வீட்டுக்கு என்ன நடந்தது.

தமிழரசனுக்கு ஏன் கையில்லை.... 

யாழினி அக்கா ஏன் இறந்தார்?

மகிழினிக்கு என்ன நோய்?

ஏன் அமுதன் சிறைக்கு போனவர்?

கேள்வி கேட்டு  துளைத்து எடுத்தாங்கள் இருவரும்....  

தீபச்செல்வனை இலகுவாகவே எனது மூத்த மகன் சேயோன் (11 வயது) கண்டு பிடித்தான்... அந்த ஸ்டோர் கீப்பறா  வாறவர் தமிழ் Book Author அல்லவா என வியக்க வைத்தான்....

வீட்டில் உள்ள தமிழ்ப்புத்தகங்களில்  தீபச்செல்வனின்  முகத்தை கண்டதாக சொன்னான்...

அவர்தான் திரைக்கதை பாடல் வரிகள் எழுதியவர் எனும் போது வியந்தான்...

படம் பார்த்து ஒரு கிழமை கடந்தும் சிறுவர்கள் இருவரினதும் கேள்விகளும் , எங்கள் கலந்துரையாடலும் இன்னும் தொடர்கின்றது....

இவ்வளவு கேள்விகளுக்கும் பதில் சொல்லும் போது தான் கவனிதேன் முழுத் ஈழத்தமிழர் வரலாறும் தான் இதற்க்கான பதில்கள்.

ஆயிரம் கதைகளால் கூட செய்ய முடியாததை ஒரு காட்சி ஊடகம்  மிக இலகுவாக புரிய வைக்கும் என்பதை அனுபவபூர்வமாய் உணர்ந்தேன்.

இது தான் சினம் கொள் திரைப்படத்தின் வெற்றி என்பேன்.  


சேரனிடம் படத்துக்கு என்ன ரேட்டிங் கொடுக்கலாம் எனக் கேட்டேன்...   

பத்துக்கு ஒன்பது என்றான்.... 


ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய  கொண்டாட வேண்டிய  திரைக்காவியம் - சினம் கொள்.

Tuesday, January 28, 2020

போரும் வாழ்வும்

போரும் வாழ்வும்

மப்பும் மந்தாரமான வானம் , மழை மேகங்கள் கருக்கட்டி கதிரவனை மறைக்க,  பேறு கால தாய் போல் வீங்கிப்பெருத்திருக்கும் முகில்கள் எப்போதும் மீண்டும் மழை உடைத்துக் கொண்டு கொட்டலாம் என்கின்ற நிலைமை.....

இடையிடையே மேகங்கள் மோதி காதைக்கிழிக்கும் இடியும் மின்னலுமான காலநிலை .... 

கடந்த கிழமை தொடக்கம் பெய்த மழையில் நிரம்பிய குளத்துக்குள் இருந்து தவளைகள் போடும் சத்தம் எரிச்சலை தந்து கொண்டிருந்தது.......

வீதியால் செல்லும் மாட்டு வண்டியில் கொழுவியிருக்கும் அரிக்கன் விளக்கு வெளிச்சம் தவிர வேறோன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை....

A9 கண்டி வீதி ஆள் அரவாரமற்று அமைதியாய் கிடந்தது.....

தனித்திருக்கும் யாரையும் பயம் கொள்ளச்செய்யும் கும்மிருட்டு மணி பின்னேரம் ஆறைத் தாண்டி இருக்காது ஆனாலும் இருட்டுக்கட்டி கிடந்தது மாங்குளம் எனும் சிறு நகரம்!

யாழ்ப்பாண இடப்பெயர்வால் உப்பிப்பெருத்துப்போய் இருந்தது மாங்குளம்.புதிது புதிதாய்  முளைத்த வர்த்தக நிலையங்கள் பொதுமக்கள் குடியிருப்புக்களால்  களைகட்டிக்கிடந்தது மாங்குளம்.

நகரமா அல்லது கிராமமா? இன்னும் தெளிவில்லா ஊர் அது!

கண்டி வீதியில் வன்னியின் மத்தியில் ஒட்டுசுட்டான் ,மல்லாவி ,கிளி நொச்சி ஓமந்தை என வன்னியின் நான்கு முக்கிய நகர்களுக்கு மத்தியில் பரந்து விரிந்து அமைதியாய் கிடக்கும் ஊர் மாங்குளம்....

இந்த நிலத்திற்க்காக உயிர்கொடுத்த பிள்ளைகள் ஏராளம்....

கந்தகம் ஏற்றி வெடித்த மாங்குளம் மண்ணின் மைந்தன் போர்கின் சிரித்த முகம் மாங்குளம் சந்தியை கடக்கும் ஒவ்வொரு தடவையும் வந்துபோகும்...

எத்தனை துனிச்சல்…. தன்னலமில்லா உயிர்க்கொடை... எத்தனை உயர்ந்த உள்ளங்களோடு வாழ்ந்திருந்தோம்!

அந்த புனிதங்களின் மகத்துவம் எத்தனை பேருக்கு அப்போது புரிந்தது என்று தெரியவில்லை!

இபோது புரியும்போது அவர்கள் இல்லை!

எல்லா நினைவுகளையும் தன்னில் தாங்கிய படி காலத்தை வென்று அமைதியாய் கிடக்கிறது மாங்குளம்!

95ம் ஆண்டு யாழ்ப்பாணதில் இருந்து சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை எனும் பெரும் அழிவு துரத்த பாதுகாப்பு தேடி வந்தோருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடைக்கலம் கொடுத்த வன்னிப்பெரு நிலம்!!

எப்போதும் நினைத்துப்பார்துண்டு யாழ்ப்பாணம் நோக்கி வன்னி மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை வந்திருந்தால நாங்கள் இவர்களைப்போல் அவர்களை அன்போடு அரவனைத்திருப்போமா என!

எத்தனை உயர்ந்த மனதோடு மனம் கோணாமல் அரவனைத்து பாதுகாத்தார்கள்!

மாங்குளமும் இடம்பெயர்ந்து வந்தோரால் நிரம்பிவழிந்தது. புதிய புதிய கடைகள் , வைத்திய  நிலையங்கள் , குடியிருப்புக்கள் என ஒரு சிறு நகரமாய் உருக்கொள்ளத் தொடங்கியிருந்த காலம் அது.

கண்டி வீதியும் ஒலுமடு வீதியும் சந்திக்கும் சந்தியில் பழைய மின்சாரசபை வளவு முன்னொரு காலத்தில் இந்திய இராணுவமுகாமாக இருந்த இடம் இப்போது தமிழீழ பொருன்மிய மேம்பாட்டுக்கழகத்தின் வாகன திருத்துமிடமாக மாறி இருந்தது. இது தான் சீலன் எனும்  தர்மசீலனின்  வேலைத்தளம்.


அந்த வளவை மூடி கிளைபரப்பி வளர்ந்திருக்கும் வாகை மரம் அதன் கீழ் ஒரு அறையுடன் கூடிய சிறிய அலுவலகம் வாயிற்காப்பாளருக்கென வாசலில் சிறு தகரத்தால் செய்யப்பட்ட கொட்டில்  மோட்டார்  சைக்கிள் திருத்தும் கொட்டகை   விமானத்தாக்குதலால் இடிந்து கிடக்கும் அயல் வீடு  , யாழ்ப்பாணத்தில் இருந்து கடைசி நாள் இடப்பெயர்வின் போது கிளாலிக் கடற்கரையில் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் , திருத்தம் செய்யவென வந்த  இயக்க வாகனங்கள், முல்லைத்தீவில் இயக்கத்தால் கைப்பற்றபட்ட பெரிய  ட்றக் , ஓமந்தை விவசாயி ஒருவரின் ட்றாக்க்டர்  என  அந்த வளவு வாகனங்களால் நிரம்பிக்கிடந்தது!

இங்கே தான் உதயன் சீலனுக்கு அறிமுகமானான்...  அவன் ஒரு டீசல் எஞ்சின் மெக்கானிக்....

சீலனுக்கு தரப்பட்ட பணி அந்த திருத்த பட்டறையை நிர்வகிக்கும் தொழில்... கணக்கு வழக்கு பார்ப்பதில ஆரம்பித்து மெக்கானிக்மாருக்கு சாவி எடுத்துக்கொடுக்கும் எடுபிடி வேலை தொடக்கம் வேலை செய்பவர்களுக்கும் தனக்கும்   கரிப்பட்டமுறிப்பில் உள்ள உணவுவிநயோக தளத்துக்கு சென்று சென்று (கிட்டத்தட்ட  மாங்குளத்தில் இருந்து 7 மைல்களுக்கு அப்பால் உள்ள இடம்) மதியச் சாப்பாடு எடுத்துவரும் வேலை வரை செய்ய வேண்டும்.....

சீலன் உடைந்து போனான்...

கிறீஷ் படிந்த ஆடையும் அழுக்கு கையுமாக தனது உருவத்தை பார்க்க அவனுக்கே அருவருப்பாய் இருந்தது. ஏன் இப்படி?

இயந்திரவியலாளனாக வரவேண்டும் என்ற இலக்கோடு படித்த மாணவன் , இப்படியானால் யார்தான் பொறுத்துக்கொள்வார்!

சொகுசாக வீடு , கோயிலடி , வாசிகாகசாலை அரட்டல் , விளையாட்டு மைதானம்  என சொகுசாக யாழ்ப்பாணத்தில்  வாழ்ந்த சீலனுக்கு இது புது ஒரு அனுபவம்...தீடிரென வாழ்க்கையை மறுவளமாக புரட்டிப்போட்டது போன்ற நிலைமை...

இடப்பெயர்வால் எல்லாமே விட்டுப்போக குடும்பத்தை காப்பாற்ற ஏதாவது வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலைமை....

இடம்பெயரும் போது எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு வராததால் வேலை எடுப்பதென்பது வன்னியில் முயற் கொம்பு....

எந்த வேலைக்கு இன்ரவியூவுக்கு போனாலும் குறைந்தது நூறு பேராவது இன்ரவியூக்கு வருவாங்கள் இதில  ஒன்டுமே இல்லாத சீலன் தரவழி எங்க எடுபடுறது!

ஏலவல் சோதனை எழுதி றிசல்ட் இன்னும் வரவில்லை மனதுக்குள் கம்பஸ் கிடைக்கும் என்ட ஒரு நம்பிக்கை சீலனுக்கு இருந்திச்சு... இதுக்குள்ள இயக்கத்தின்ட கடைகளிளோ அல்லது ஒபிசுகளிளோ வேலை செய்தா கம்பஸ் கிடைச்சாலும் வன்னியைவிட்டு வெளியில போக ஏலாது எண்டு எல்லோரும் பயப்படுத்தினாங்கள்.....

அவங்கள் சொல்லுறதும் சரி போலத்தான் சீலனுக்கு இருந்திச்சு!

எதுக்கு வம்பு சோதனை மறுமொழி வரும் வரைக்கும் ஏதாவது பள்ளிக்கூடம் அல்லது ரியூட்டறியில மட்டுமே வேலைக்கு போறதென்டு முடிவா இருந்தான் சீலன்.

அக்காலத்தில் வன்னியில் இருந்த ஒரே ஒரு புளுக்கொலர் வேலையான ஆசிரியர் தொழில் தான் அதுதான் எல்லோரினதும் முதன்மை விருப்பத்தேர்வாக இருந்தது!  அதைவிடவும் பெருமையான வேலையென்டா NGO வேலை... அது வேற லெவல்...  அதெல்லாம் கனவிலையும் நினைச்சு பாக்க இயலாது.

பெரும்பாலும் அனேகமானவை வோக்கின் இன்டவியூக்கள்...   நேரடியா நேர்முகத்தெரிவு அன்று போய் கலந்து கொள்ளவேண்டியதுதான்.... போய் வாசலில இறங்கேகயே முடிவு அனேகமாக தெரியும்...

சங்க கடைக்கும் இன்டவியூக்கும் தான் சனம் அதிகம் கூடும்....

எத்தனை நேர்முகத்தேர்வுகளுக்கு சென்றாலும் இறுதியில் நிராகரிக்கப்பட  என்ன செய்வது என்று தெரியாத திரிசங்கு நிலை சீலனுக்கு .....

ஈழநாதம் பேப்பரில வாற ஆட்கள் தேவை விளம்பரங்கள்  ஒன்டும் எதையும் அவன் தவறவிடுவதில்லை...

அவனது வயதை ஒத்த வயது நண்பர்கள் இன்னும் விளையாட்டுப்பிள்ளைகளாக சுத்தித்திரிய இவனது நிலை திடீரென  இவ்வாறு  மாறியதை பெரிய மனதோடு ஏற்றுக்கொண்டான்.

ரியூட்டறி ஆசிரியர் தேவையில் இருந்து பள்ளிக்கூட ஆசிரியர் தேவை வரை எல்லாவற்றுக்கும் விண்ணப்பித்தும் ஒரு வேலையும்  கிடைக்காத வெறுப்பில் வன்னி முழுக்க வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான்...

குடும்ப நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது.... அம்மாவின் நகைகள் ஒவ்வொன்றாய் விற்று முடித்துவிட ... மூன்று வேளை உணவு  இரண்டு  வேளையாய் குறைந்தது.....


வறுமை சீலன் வீட்டு கொட்டிலுக்குள் தாண்டவமாடிக்கொண்டிருந்தது…

எப்படியாயினும் வேலை எடுத்தே ஆகவேண்டிய நிலை….

தம்பி உப்பிடி இருந்து ஓன்டும் செய்யேலாது ஏதாவது கடையில அல்லது சங்கத்தில வேலைக்கு சேர்... வேலையாவது  பழகுவாய்....

என அவனது குடும்ப நிலைமை தெரிந்த உறவினர்கள் அவனை நச்சரிக்க தொடங்கினர்....

இலவசமாய் கருத்து சொல்ல பலர் இருந்தனர்.. ஆனால் அவனுக்கு உதவிசெய்ய எவரும் இருக்கவில்லை....

முருகண்டி ஆலயத்துக்கு அருகில் ஒரு கிருஸ்தவ பாதிருயார் நடாத்தும் தொண்டு நிறுவனம் ஒன்று உள்ளது அங்கு போய் வேலை கேட்டுப்பார் என  எங்கள் கொட்டிலுக்கு பக்கத்து கொட்டிலில் தங்கியிருந்த இளவாலையில் இருந்து இடம் பெயர்ந்திருந்த அலோசியஷ் அண்ணர் சொன்னார்....

அந்த பாதிரியார் நல்லவராம் போய் கதைத்துப்பார்  தம்பி! ஏதாவது உதவிசெய்வார்......

மருமகன் போன கிழமை அங்க போய் கதைச்சு தான் வேலை எடுத்தவன் என்றார் அலோசியஸ் அண்ணர்!

அவரின் பேச்சு நம்பிக்கையை தந்தது!  மனதுக்குள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை சீலனுக்கு துளிர்விட்டிருந்தது.

இரவு புரண்டு புரண்டு படுத்தும் நித்திரை வரவில்லை...  எப்படியும் அலோசியஸ் அண்ணர் சொன்ன இடத்தை போய் முயற்சி செய்து பார்த்த்து விடவேண்டியதுதான்.

கையில் எப்போதும்  கட்டியிருக்கும் கசியோ மணிக்கூடு சிணுங்கியது  நேரம் 6:00 மணி , அம்மா ஈரவிறகோடு அடுப்படியில் போராடிக்கொண்டிருந்தாள்  , வானம் மெல்ல சிவக்க தொடங்கியிருந்தது....    வெளியில் மெல்லிய வெளிச்சம் பரவத்தொடங்கியிருந்தது...   அம்மாச்சி விடிந்தும்  வியாத அந்த வேளையில் முற்றம் கூட்டிக்கொண்டிருந்தாள்....  சீலன் அவசரமாக எழுந்து வெளியே சென்றான்...

வாய்க்காலில் குளித்துவிட்டு, அம்மா ஊத்திய பிளேன் ரீயை அவசர அவசரமா குடித்துவிட்டு, சைக்கிளை எடுத்தான்....

இஞ்ச ஒருக்கா நில்லு தம்பி...என்டு அம்மா சீலனை போகாமல் தடுத்தார்...

என்னனை…

நல்ல விசயத்து போகேக்க பிறத்தால கூப்பிட்டுக்கொண்டு...  அம்மாவை சீலன் சத்தமாக கேட்டான்


இந்தா இதைக்கொண்டு போய் அடைவு வைச்சுட்டு மத்தியானத்துக்கு அரிசி வாங்கிகொண்டு வா! எண்டு ஏதோ ஒன்றை சீலனின் கையில் திணித்தாள்.

நான் உதிலை இரண்டு மாங்காயை புடுங்கி கறிவைக்கிறன்... நேற்று இரவும் சின்னவன் சாப்பிட சோறு இருக்கேல்ல...

எத்தினை நாளைக்கு சாப்பிடாம கிடக்கிறது... அம்மா நிறுத்தாமல் புலம்பினாள்!

என்னனை உது...

அம்மாவின் பழைய கை லேஞ்சியால் கட்டப்பட்டிருந்த சரையை அவிழ்த்துப்பார்த்த்தான் அம்மாவின் தாலி மின்னியது....சீலனுக்கு கோபம் தலைக்கேறியது..


உங்களுக்கு என்ன விசரே பிடிச்சுருக்கு ... கொண்டு போய் உள்ளுக்கு வையுங்கோ என சத்தமாக கத்திவிட்டு அம்மாவின் கையில் தாலியை   திணித்துவிட்டு

அம்மாவின் பதிலுக்கு காத்திராமல் விறுக்கென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு

முருகண்டி நோக்கி பயணமானான் சீலன்....

நிச்சயமாய் தெரியும் அம்மா இப்போது அழத்தொடங்கியிருப்பாள்!  மனது வலித்தது!


எப்படி இருந்த எங்கட குடும்பம் இப்படி ஆச்சே என்கின்ற நின்னைப்பே கண்ணீரை அவனுகுள் வரவழைத்தது...

எப்படியாவது இண்டைக்கு வேலைகிடைக்க வேணும் எனும் ஓர்மத்துடன் அண்ணா சிலை அருகில் இருந்த கோவிலில் கும்பிட்டுவிட்டு சைக்கிளை வேகமாக மிதித்தான் சீலன்.

கட்டாயம் எப்பிடியும் இது கிடைக்கும்..  கிடைச்சா முதல் மாத சம்பளத்தில முருகண்டியானுக்கு  ஒரு தேங்காய் உடைப்பன் என்கின்ற நேத்திக்கடனோட முருகண்டி நோக்கி சீலனின் சைக்கிள் பறந்தது!

அம்பலபெருமாள் சந்திதாண்டி  அக்கராயன் ஆஸ்பத்திரிக்குன் கிட்ட வரேக்க மணியண்ணை அக்கராயன் குளத்துக்கு குளிக்க போய்க்கொண்டிருந்தார்....

எங்க விடியவே கிளப்பிடாய் சீலன்  - எனக்கேட்டார் மணி அண்ணை.

மணியண்ணை வேற லெவல் இவ்வளவு நேர்மையான ஆளை யாரும் வாழ்க்கையில கண்டிருக்க முடியாது. மனைவியை சிறுவயதில் இழந்து தனி மரமாய் இரு பிள்ளைகளோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்....

மனதில் இருந்ததை மணி அண்ணையிடம் கொட்டினான்….. சீலனின் கண்கள் பனித்தன!

பயப்படாத உனக்கு கட்டாயம் வேலை கிடைக்கும் என மணியண்ணை சீலனை உற்சாகப்படுத்தினார், நான் வீட்டுக்கு அரிசி வாங்கி குடுக்கிறன் நீ ஆறுதலாய் கவலைப்படாமா போட்டுவா! என தெய்வம் போல் வார்த்தைகளை உதிர்த்தார் மணி அண்ணை!

அவருக்கும் சீலனுக்கும் எந்தப் சம்பந்தமும் கிடையாது அவர் வன்னியில் ஒரு மூலையிலும் நான் யாழ்ப்பாணத்தின் இன்னோர் மூலையிலும் நேற்றுவரை வளர்ந்தவர்கள்!  இடப்பெயர்வு அவர்களை இணைத்தது ....

ஒரு சில நாள் பழகினாலும் உடன் பிறந்த சகோதரன் போல் உறவு எடுத்துக்கொளவார் மணியண்ணை! நல்ல மனம் படைத்த உயர்ந்த மனிதர்!

அவருக்கு நன்றி சொன்னால் பிடிக்காது! உங்கட யாழ்ப்பாணத்து பழக்கத்தை இஞ்ச காட்டாமல்  மனிசருக்கு மனிசர் உண்மையா இருக்க பழகுங்கோ எண்டு பேசுவார்!

மணி அண்ணையின்ட கையை தனது இரண்டு கைகளாலும் அணைத்துப் பிடித்தான் ... நன்றி சொல்ல வார்த்தை வரவில்லை கதைத்தால் அழுதுவிடுவான் என்பதை சீலன் உணர்ந்திருந்தான்!

மணி அண்ணைக்கு  அது  புரிந்திருக்கும் .. அவர் சிரிப்பில் இருந்து அது வெளிப்பட்டது........

அதற்க்கு மேல் நிற்க்காமல் சைக்கிளை வேகமாக மிதிக்க தொடங்கினான் சீலன். சைக்கிள் கிறவல் பாதையில் புழுதியை கிளப்பிகொண்டு கிளம்பியது...


காலை ஒன்பது மணி இருக்கும் அலோசியஷ் அண்ணை சொன்ன இடத்தை போய் சீலன் போய்ச்சேர்ந்தான்....! 
இடத்தை கண்டுபிடிப்பது இலகுவாகவே இருந்தது . பெரிய பெயர்பலகை வாசலில் தொங்கியது...    வாயில் கதவு திறந்தே கிடந்தது....


வாசலில் வெள்ளை நிற கையஸ் வாகனம் ஒன்று நீல நிறத்தில் அரசசார்பற்ற அந்த நிறுவனத்தின் இலச்சனை பொறித்தபடி எங்கேயோ புறப்படுவதற்க்கு தயாராக்கி கொண்டிருந்தது!

சீலன் மனதுக்குள் தேவாரத்தை முனுமுனுத்தபடி, மனதுக்குள் தைரியத்தை வரவழைத்தபடி....

பாதரை சந்திக்கலாமோ....

வாசலில் நின்ற நடுத்தர வயது மதிக்க தக்க ஒருவரிடம் சீலன் கேட்டான்.

என்ன அலுவல்?..  என்றார் அவர் பதிலுக்கு...

வேலை தேடி வந்திருக்கிறன் என பதில் அழித்தான் சீலன்! பவ்வியமாக...

அக்கா ஏதாவது வேலைக்கு பேபரில விளம்பரம் குடுத்தனீங்களோ என வாசலிலே நின்றபடியே உள்ளுக்குள் இருக்கும் ஓர் யுவதியை நோக்கி கூவினான்!

பதிலுக்கு அறைக்குள் இருந்து யுவதி

உதுகளுக்கு வேற வேலையில்லை…..

விடிஞ்சா பொழுதுபட்டா எத்தனை பேர் வேலை தாங்கோ என்டு வருகுதுகள்!  என ஒருமையில் பதிலளித்தார் அந்த யுவதி!

வாசலில நிக்கிற செக்கி ஐயாக்கு எத்தனை தரம் சொன்னனான் எல்லாரையும் உள்ளுக்க விட வேண்டாம் என்டு என்று அந்த யுவதி கத்திக்கொண்டே வெளியே வந்தார்!

என்ன வேணும் என்றார் இறுக்கமாக!

பாதரை சந்திக்க வந்திருக்கிறேன் என்றான் சீலன்...

பாதர் இப்ப அவசரமா வவுனியா போறார் பிறகு வாங்கோ என்றார்! சொல்லும்போதே பாதர் இன்னொரு அறைக்குள் இருந்து வெளியே வந்தார்!

என்ன பிரச்சனை தம்பி என நேரடியாகவே சீலனைப்பார்த்து கேட்டார் பாதர் ...

பாதர் ஏதாவது வேலை இருந்தா தாங்கோ? குடும்ப நிலைமையை சொல்ல சீலனுக்கு மனது தடுத்தது.

என்ன படிச்சிருக்கிறீர்?

ஏலவல் சோதனை எடுத்துட்டு றிசல்ட்டுக்கு வெயிட் பண்ணுறன்.  என்றான் சீலன்...

தம்பி இஞ்ச கம்பஸ் படிச்ச பெடியளே வேலை இல்லாம திரியிறாங்கள்..... உம்மட தகுதிக்கு இப்ப இஞ்ச ஒண்டும் இல்லை ...

நான் அவசரமா இப்ப போக வேனும் எண்டு சொல்லிவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் வாகனத்தில் ஏறினார்....

சீலனுக்கு தலைசுற்றியது.... விழுந்துவிடுவேன் போல இருந்தது....

ஓவெனக் கதறலாம் போல் இருந்தது!

வாசலில் நின்ற யுவதி ஏளனமாய் பார்த்தாள்.. இதைத்தானே நானும் சொன்னனான் என்று சொல்லிவிட்டு சிரித்தாள்...

அவமானமாய் இருந்தது! அவளைப்பார்க்கால் வெளியேறினான்!!! அவள் வாசலில் நின்ற செக்கிறுட்டி ஐயாவோடு சண்டை இட்டுக்கொண்டிருந்தாள்....

சீலனை உள்ளே விட்ட பாவத்திற்க்கு அந்த வயோதிப ஐயா பேச்சுவாங்கிக்கொண்டிருந்தார்....

கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது!!

வீட்டுக்கு திரும்ப செல்ல மனம் தடுத்தது முருகண்டி பிள்ளையார் கோயிலில் நோக்கி சைக்கிளை மிதித்தான் சீலன்...

இக்கால முருகண்டி போல் அல்லாது வழிப்போக்கர் இளைப்பாறவென சிறு சிறு குடில்களும் திண்ணையும் முருகண்டிப்பிள்ளையார் கோயிலின் பின் வீதியில் அக்காலத்தில் அமைந்திருக்கும்.

அந்த திண்ணையில் சைக்கிளை சாத்திவிட்டு ஓரமாய் சார்ந்து கண்களை மூடி மனதுக்குள் அழுதான்.

என்ன செய்வதென்று தெரியவில்லை ....

எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை.....

விதியை நொந்துவிட்டு... கோயிலிக்கு அருகில் இருந்த  பெரிய தண்ணீர் தொட்டியில் முகத்தை கழுவிட்டு நிமிர்ந்தபோது எதிரே இருந்த  பெரிய கட்டவுட்டில்  தீலிபன் அண்ணா சிரித்தபடி நின்றார்... மரணம் ஒரு தடவைதான் வரும். அதற்காக மானத்தை விற்றுச் சீவிக்கமுடியுமா? எனும் அவரின் வாசகம் ஏதோ ஒன்றை சீலனுக்கு சொல்லுவது போல் இருந்தது.


பயணம் தொடரும்....

Sunday, December 8, 2019

கொக்குவில் இந்துவின் கிரிக்கெட் கீரோக்கள்...


1985ம் ஆண்டு கொக்குவில் இந்துவிற்க்குள் 6ம் ஆண்டுக்கு தெரிவாகி உள் நுழைகின்றேன்.  ஆரம்ப பாடசாலையில் இருந்து உயர் பாடசாலைக்கு வந்ததில் ஏகப்பட்ட சந்தோசம்...

சந்தோசம் என்பதை விடவும் பிரமிப்பு. வானுயர உயர்ந்து நிற்க்கும் மூன்று மாடிக் கட்டடம்…..

பரந்து விரிந்திருக்கும் மைதானம்......

பெரிய வகுப்பறைகள்... நூலகம்.......

என எல்லாவற்றையும்  ஆச்சரியம் கலந்த விளிகளோடு வென வாயைப் பிளந்தபடிஅன்னாந்து பார்த்தபடி நகர்கின்றோம்...



அன்று எங்கள் சின்னக் கண்களுக்கு அவை பெரிதாய் எங்களுக்கு தெரிந்தனவா? அல்லது இப்போதெல்லாம் எங்கள் மனங்கள் போலவே நாங்களும் குறுகிப் போனோமா தெரியாது?

இப்போது அந்த பிரமாண்டங்களை மனம் உணர்வதில்லை.......

இதைவிட….

மூன்றாம் மாடிக் கண்ணாடிகள் சில உடைந்திருந்தன....

உடைந்திருந்த யன்னலைக்காட்டி இந்த கண்ணாடியெல்லாம் சிக்ஸ் அடிச்சு உடைச்சது உமாசங்கர் அண்ணையும்  லோகன் அண்ணையும் என்று யாரோ சொன்னாங்கள்....  

ஆச்சரியத்தோடு இந்தக்கதைகளைக் கேட்டோம்....

மூன்றாம் மாடி யன்னலுக்கால கதிரை வைச்சு ஏறி மைதானத்தை பார்த்தபோது  தலை சுற்றியது!!

உமாசங்கர் அண்ணையை ஏற்கனவே தெரியும் மஞ்சவனப்பதி வீதியில் பொலிபோல் விளையாடேக்க பாத்திருக்கிறன். ஆனால் லோகன் யார் ஆள் என்று தெரியாது....

சந்திரநாதன் ,லாலா ,ரஞ்சித், பாலா ,விஜி  அண்ணன்மாரின் புகழ் பற்றியும் பெடியள் சொல்லுவாங்கள்.... 

இவர்களில் சிலர் கணாவின் அண்ணன்மார் என்பதில் அவனுக்கு பெருமை... கதை கதையா எடுத்து விடுவான்....

யாழ்ப்பாணத்தை கலக்கிய துடுப்பாட்ட வீரர்கள் இவர்கள் என சொன்னாங்கள்..... 

ஆனாலும் இவர்கள் விளையாட்டை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை....

ஆனாலும் மனதுக்குள் இருந்த அந்நாள் கிரிகெட் கீரோ கவாஷ்கருக்கு பக்கத்தில் இவர்களும் கிரிக்கெட் நாயகர்களாக சேர்ந்து கொண்டார். இந்த கீரோக்களைப் பார்க்க அடிக்கடி  புதுகோயில் கடந்து மைதானப்பக்கம்  போய் வருவோம்... 

சின்னப் பெடியளை கண்டாலே இலையான் கலைக்கிற மாதிரி பிறிவெக்ட்(Prefect) பட்ச்சை குத்திக்கொண்டு திரியிறவங்கள் கலைச்சு போடுவாங்கள்....

மகேந்திரம் சேர் கண்டால் இஞ்சால உங்களுக்கு என்ன வேலையென அடியும் விழும்....இவ்வளவு ரிஷ்க் எடுத்து ஒரு நாள் கடைசில லோகன் அண்ணையை குறூப்பா போய் பொம்பிளை பார்க்கிற மாதிரி ஒளிச்சு நின்டு பார்த்ததில ஒரு பரம திருப்தி....

சென்றல் கிறவுண்டில கோகுலன் அண்ணர் அடிச்ச சிக்ஸர் மணிக்கூட்டு கோபுரத்துக்கு மேலால போச்சுதாம்.... கிருபானந்தன் அண்ணையின்ட ஆட்டத்தால எங்கட ரீம் வென்டுதாம் என்டு படக்கதை சொல்லுறமாதிரி கதை கதையா சொல்லுவாங்கள்….

விசோ என்கின்ற விஷ்வநாதன் கொக்குவில் இந்துவுக்கு கிடைத்த மாஸ்டர் கிளாஸ் கிரிக்கெட்டர்... யாழ்ப்பாணத்தை கலக்கியஸ் டைலிஷ் கிரிக்கெட்டரில் ஒருவர்...  

இவரின்ட ஸ்டையில வகுப்பில பற்பன்னி காட்டுவாங்கள் பெடியள்...

ஆறாம் வகுப்பில இருந்த எங்களுக்கு இதுகள் தான் அந்த நாள் ”சுப்பர் மான்” கதைகள்...

கிருபா அண்ணை, மதி அண்ணை, மகேந்தி அண்ணா , சதீஷ் அண்ணா, விமல்ராஜ், பண்டா அண்ணை, டொலி அன்றியிண்ட சுதா, நவீன்,  சிக்கி, பம்ம்பர கண்ணன், கெங்கா, சஞ்ஜீவன், சுபன் என சிலர் மனதில் நிலைத்தாலும் மூன்றாம் மாடி கண்ணாடி உடைக்காததால் அல்லது உடைச்சும் எங்கட காதுக்கு செய்தி வராததால் உமாசங்கர் அண்ணை , லோகன் அண்ணை , கோகுலன் அண்ணை போன்றோரின் பிம்பம் இன்னும்  உடைக்கப்படாமலே இருந்தது......

சத்தியபாலனின் தலைமையில் விளையாடிய சிறந்த அணிக்கு பிறது  பெரிசா நாங்கள் மார்தட்டிக் கொள்ளுற அளவுக்கு கிரிக்கெட் அணி அமையவில்லை...

பண்டா(சுதாகரன்) அண்ணை எப்படியும் மூன்றாம் மாடிக்கண்ணாடியை உடைச்சு பெரிய கிரிக்கெட்டர் என்ட போஷ்ட்டை தூக்குவார் என்டு  இரசிகர் பட்டாளங்கள் நாங்கள் நினைச்சம் ஆனா அதுவும் நடக்கேல்ல....

நாங்கள் செட் பண்ணி வைச்சிருந்த இந்த கொக்குவில் இந்து விண்ட கிரிக்கெட்டர் அளவுகோல் விளையாடின வங்களுக்கே தெரிஞ்சிருக்குமோ  தெரியாது!! 

ஆனா வெறித்தனமான ரசிகர்கள் நாங்கள் உவங்களின்ட திறமையை அளக்க வேற வழி ஒன்டும் இருக்கெல்ல உதயன் பேப்பர் காரணையும் நம்பேல்லாது! 

அவன் எப்பவும் யப்ணா கிண்டுவைத்தான் தூக்கிப்பிடிப்பான். யப்ணா கின்டு தோத்தா "யாழ் இந்து போராடி தோற்றது" என அடுத்த நாள் செய்தி போடுவான் , இதே எங்களுக்கென்டா கொக்குவில் இந்து படுதோல்வி” என கொண்டாடுவான்.

அந் நாட்களில் உதயன் பேப்பர் யாழ்ப்பாணத்தின் சிறந்த வீரர் தெரிவு நடத்திய மாதிரி, நாங்களும் எங்கட பள்ளிக்கூடத்தில சிறந்த வீரரை  தெரிவு செய்து வைச்சிருந்தம்... மூன்றாம் மாடிக் கண்ணாடி உடைச்சவன் என்கின்ற சேர் பட்டத்தை விடவும் சிறந்த பட்டம் அது......

இந்திய இராணுவ பிரச்சனை வந்து ஒரு இரண்டு மூன்று வருடத்தை ஒண்டுமே இல்லாமல் செய்தது.  பள்ளிக்கூடம்  சின்னா பின்னமாக.....   

மைதானத்தின் மூலையில் நின்ற வேப்ப மரத்திற்க்கு கீழே அகதிகளாய் கல்லூரியில் தங்கியிருந்த 58 பேரின் உடலங்களை புதைத்த மண்ணின் மீது மீண்டும் புல் முளைத்து வர காலங்கள் எடுத்தது!! பிள்ளை பிடிகாரர்களால் வீதிகள் நிறைந்திருக்க பலர் தூர தேசங்களுக்கு சென்று தப்பினர்...

நல்ல கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை மைதானம் தேடிக் கொண்டிருந்தது......

இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் கொக்குவில் இந்துவின் கிரிக்கெட் வரலாற்றை எழுத எங்கட பட்ச்சில இருந்தே சில பேர் முளைப்பாங்கள் என சத்தியமாய் நினைத்திருக்கவில்லை....

நீன்ட அமைதியின் பின்…….  

வரும் போதே புயலாய் வந்தார்கள்...

அமரர் சேவயர் மாஸ்டரின் ஆரம்பம் உமாசங்கர் அண்ணையின் வளர்ப்பு , ரஞ்ஜித்தின் கண்டிப்பு, கோகுலன் அண்ணை , பாலா , பவசிங்கம் , செல்வராசா அண்ணர் போன்றோரின் அரவணைப்பு என பல சிகரங்களின் கையில்  வளர்ந்ததாலோ என்னவோ  எல்லா மட்சில்லையும்  வெற்றி....

அண்டர் 15 இல் தொடங்கி 17 ,19 என ஒரு கலக்கல் ஆட்டம்.

இதில் ஆராவின்(ஆரூரன்) பங்கு மகத்தானது.... 

இவன் தான் எங்கட எம்.எஸ் தோனி(MS Dohni) தொடர்ந்து அணித் தலைவனாய் அணியை வெற்றி நோக்கி நகர்த்திய ஆளுமை மிக்க கப்டன்....

அணியில் விளையாடிய வயதில் குறைந்த வீரர்களான சசி(நம்பர் 1,2,3 - ஒரே பேர் வழியில மூன்று பேர் - இப்ப பெரியாக்களா இருப்பாங்கள் அதனால் அவங்கட சிறப்பு பட்டப் பெயர்களை தவிர்க்கிறன்), கேதீஷ் ,சந்திரகாசன் போன்றவர்களை உற்சாகமூட்டி எதிரணியின் பலம் அறிந்து விளையாட்டின் போக்குக்கு ஏற்ப தீர்மானங்கள் எடுப்பதில் அவனுக்கு நிகர் அவனே!!

எங்கள் அணி பெற்ற வெற்றிகளுக்கு ஆணிவேராய் நின்று வழி நடாத்திய தளபதி அவன்......

அண்டர் 19 இல்……

ஷ்கந்தாவோட 130 , ஸ்ரான்ட்லி  158,  மானிப்பாயோட 204, சென் ஜொன்ஷ் உடன் 267 , சென்றல் ஓட 248  , ஹாட்ட்லியோட 240 ,  வட்டுக்கோட்டையோட 253 …… 

என வெற்றிக்கொடி கட்டிய பயணம்.... 

யாழ் இந்து வோடு விஷ்வரூபம் எடுத்தது...

எல்லாப் பள்ளிக்கூடங்களோடும் வென்றாலும் யாழ் இந்துவோடு வெல்லுறதில தான் எங்களுக்கு பரமதிருப்தி!  உதயன் காரன் ஊட்டி வளர்த்த பகைமையாய் கூட இருக்கலாம்...

அது தான் எங்களுக்கு அந்தக் காலத்தில பிக்மட்ச்!!

மார்ச் மாதம் 5ம் , 6ம் திகதி 1993ம் ஆண்டு

கொக்குவில் இந்துவின் கே.கே. ஸ் றோட் பக்க மதிலுக்கு பக்கதில இருந்த ஐயர் வீட்டு பாத்துறூமுக்கு மேல் பவிலியனில தகரம் தடி பொல்லு என நாங்கள் செட்டாக......

ஞானதேசிகன் குறூப் கிருபா அண்ணை வீட்டு மதில் பக்க பவிலியனில தாரை தப்பட்டைகளோட களமிறங்க.....

தடல் புடலா நடந்த மட்ச் அது....

191 ஓட்டங்களுடன் யாழ் இந்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து தொடங்கிய எங்கள் அணி ஆட்டத்தை ”காணக் கண் ஆயிரம் வேணும்” என்டு வாங்களே அது மாதிரி ஒரு விளையாட்டு!!

இன்றைக்கும் இருபந்தைஞ்சு வருடம் போயும்...

வேல்ட்கப்புகள்  ,IPL , பிக்பாஷ் எது பாத்தாலும் அந்த மட்சிண்ட கிக் எதிலையும் இல்லை...

ஒவ்வொரு போலையும் இரசித்து பார்த்த மட்ச் என்டா இது தான்.. …


ரஜீவனும் ஜனாவும் ஓப்பினரா தொடங்கி வைக்க ஜனா எதிர்பாராதவிதமாய் ஆட்டமிழந்தான்...அவனைத் தொடர்ந்து புதிய ஆட்டக்காரனாய் உள் நுழைந்தான் கிருபா(சுகு)!!


வரும் போதே ஒரு ஷ்டைலாத்தான் வருவான் எங்கட வகுப்புகார கிருபா!!
எங்கட வகுப்புக்காரன் என  சொல்லி உரிமை கொள்வதில் ஒரு சின்னப் பெருமை!!!

அவன் விளையாடி  விளையாடியே வகுப்புகளை கட் பண்ணினான் எண்டா நாங்க இவன் பாவியிண்ட விளையாட்டு பார்க்கப்போய் வகுப்புக்களை கட் பண்ணிய நாட்கள் ஏராளம்!!!

பந்துக்கும் நோகாம (Bat)பட்டுக்கும் நோகாமல் அடிக்கிற வித்தை அவனுக்கு மட்டும் தான் தெரியும்..

அப்பிடியே நின்டபடி முழங்கால் மடியாம பந்துக்கு நோகாம  சின்ன ஒரு கிஸ் ... பையின் லெக்கில நிக்கிறவன் பவுன்றி லையினுக்கு வெளியில ஓடுவான் பந்து பொறுக்க..... 

அதுதான் அவனின்ட சிக்னேசர் சொட்….

ஆட்டம் தொடக்கம் நல்லா இருந்தாலும் பினிசிங் சரியில்லை எண்ட மாதிரி மூன்றாவதாக வந்த கிருபா மட்டும் நிக்க விகெட்டுகள் கட கட வென அடுத்த பக்கத்தில்  விழத்தொடங்கிச்சு..

6 விக்கெட் இழப்புக்கு 98 ஓட்டங்கள்....

கிருபானந்தன் அண்ணையிண்ட மதிலில கறுத்த பெயிண்டால செய்த ஸ்கோர் போட் அழுது வடிஞ்சு கொண்டிருந்திது....

தோல்வி பெரும்பாலும் உறுதிசெய்யப்பட்டு விட்டது! இனி ஏதும் அதிசயம் நடந்தால் தான் உண்டு…..

கமலரிண்டை வகுப்பை கட் அடிச்சிட்டு வந்த கண்சிமிட்டி சசிதரன் உவங்கள் தோக்கப் போறாங்கள்... யப்ணா கிண்டு விட்ட நாறப்போறாங்கள் என சொல்லி விட்டு... இடையிலேயே போய் விட்டான்.....

எங்களுக்கு ரென்சன்...  ரென்ஷன் என்பதைவிடவும் ஒருவித அவமானம்...

இப்பதான் கிளை மாக்ஷ் காட்சி தொடங்குது..... (இளையராஜாவின் பேய்ப்பட டியுங் டியுங்...மியூசிக் இந்த இடத்தில....)


ஆறாவது வது பட்ஷ்மன்னா சின்னக்கண்ணன் பாரதியார் சொன்னது போல் "எங்கிருந்தோ வந்தான்என்ட மாதிரி


கிருபாவோட சேர்ந்து விளையாடத்தொடங்க நிலைமை தலை கீழா மாறிச்சு....

கிருபா 75…..

 சின்னக்கண்ணன் 98……

அப்பத்தான் அந்த அதிசயத்தை கிருபா நிகழ்த்தினான்...


மூன்றாம் மாடிக் கண்ணாடி உடைக்கிறதே பெரிய விசயமாய் இருக்க இவன் மிட் ஓப்க்கிலால அடிச்ச சிக்ஸ் பள்ளிக்கூட மூன்றாம் மாடி மூலையில இருக்கிற வேப்பமரம் கடந்து கே.கே. ஸ் றோட் கடந்து மஞ்சவனபதி வாசலில ( இப்ப வளைவு இருக்கிற இடம்) போய் விழுந்திச்சு....


றீ பிளையெல்லாம் பார்க்க முடியாது... பாக்க கிடைச்சவனுக்கு அதிஸ்டம்…. அணில் பாத்தவனுக்கும் , பாதரின்ட பற்றீசில மயங்கி கிடந்தவனுக்கும்  சொறி(sorry) தான்!

எங்கட கொக்குவில் இந்து கிரிக்கெட்டர் அளவுகோலை மாத்தின பெருமை அவனுக்கு தான்....  

அன்று லோகன் அண்ணை உமாசங்கர் அண்ணை போன்றோரின் சாதனையை ஓவர் ரேக் பண்ணினான் எங்கள் கிருபா....

இடையில ஒரு சோடா வாங்க பத்து பேரிட்ட காசு சேர்த்து  கொஞ்சம் குடிச்ச படி வைச்சிருந்தம் 100 அடிச்சா கிறவுண்டுக்குள்ள ஓடிப்போய்க் குடுக்க எண்டு

கடைசி வரை அந்தப் பாக்கியம் கிடைக்கவேயில்லை....

324 அடிச்சு ஒய்ந்தாங்கள் எங்கட பெடியள்.....

இப்ப பளோ ஓன் ... 

10 விக்கெட்டையும் 5:30 மணிக்குள் புடுங்கினா எங்களுக்கு வெற்றி..

9 விக்கெட் இழந்து 111 ஓட்டம் எடுத்து 5:30 ஆகும் வரை ரெஸ்ட் மட்ச் விளையாடிட்டு ஆளைவிட்டா போதும் என போய்ச் சேர்ந்தாங்கள்.....

ஆரா தலைமையில் ரஜீவன், கிருபா, ஜெனா, சிங்கிலி, கண்ணன், சின்னக்கண்ணன் , காண்டி என்டு நம்பிக்கை நட்ச்சத்திரங்கள் அணிவகுத்து யாழ்ப்பாணத்தையே கலக்கி எடுத்தது அது ஒரு பொற்க்காலம்!!



இதில கண்ணனிண்ட பந்து வீச்சு வேற லெவல்….

வேகம்….வேகம்....

விக்கெட் பறந்து போய் பவுண்டறி லையினுக்கு கிட்ட விழும்....

அந்தக்காலத்தில பந்து வீச்சு வேகத்தை அளக்க ஏதாவது கருவி இருந்திருந்தா 140 மேல கட்டாயம் இவனின்ட பந்துவீச்சு வேகம் இருந்திருக்கும்...

சுபர்சொனிக் மாதிரி வேகமா போடுவான்.....

எங்கட யாழ்ப்பாணத்து பிறட்லீ(Brett Lee) இவன் தான்!!! எல்லா பற்ஷ்மன்னுக்கும் சிம்ம சொப்பனம்...

தொடர்ச்சியாக வேகமாக (Consistent Pace) பந்துவீசும் திறமையுள்ள வீரன்... சராசரிய 4 தொடக்கம் 5 வரையான விக்கெட்டுகளை பந்து வீசிய எல்லா போட்டிகளிலும் இவன் பெற்றது இவனது சிறப்பு.

சென்றல் கிறவுண்டில கேறீபிள்சீ(KCCC) மச்..... ஸ்கந்தாவோட என நினைக்கிறன்...

எப்படியும் மத்தியானத்துக்கு பிறகு போனா மச் களைகட்டும் கடைசிக்கட்டம் பாக்கலாம் என்டு பின்னேர வகுப்புகளை கட் அடிச்சிட்டு வந்தா மட்ச் முடிஞ்சு எல்லாரும் வீட்டுக்கு போயிட்டாங்கள்...

என்னடா என்டு புதினம் கேட்டா……

அடப்பாவி கண்ணா 5 விக்கெட்டை 6 ரன்னுக்கு புடிங்கி (என்டு நினைக்கிறன்)  கேமையே மத்தியானத்துக்கு முதல் முடிச்சு விட்டான்....

செந்தில்வேல் நாதனுக்கு பிறகு எங்கட பள்ளிக்கூடம் கண்ட மிகச்சிறந்த பந்துவீச்சாளன்…

ரஜுவன் இவனைத் தவிர்த்து எங்கள் அணியின் புகழைச் சொல்ல முடியாது!

பவிலியனில் இருக்கும்போது இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் இருக்கும் அமைதியின் உருவம்...

மைதானத்தில் இறங்கினால் வேற லெவல்....

எட்டுப் பக்கமும் பந்து பறக்கும்....

ஒபின் பட்ஷ்மன்….. 

பந்து வீச்சிலும் கலக்குவான்.... 

எங்களுக்கு கிடைச்ச நல்லதொரு ஓல் றவுண்டர்....

இவனை நம்பி அடுத்து பட் பண்ண போற கிருபா பாட் பண்ணாமல் இருக்கலாம்...

அவ்வளவுக்கு நம்பிக்கையா நிண்டு விளையாடுவான்....

இவனும் ஜெனாவும் சேர்ந்து போடுற பிள்ளையார் சுழிதான் பல வெற்றிகளுக்கு காரணம்.....

யோகரன், சசி, யக்குட்டி, கருணா ,சிவசீலன், நந்தீஸ் என பலர் எங்கட பட்சில இருந்து ஆரம்பக்கால ரீமின் வளர்ச்சிக்கு உதவிய வீரர்கள்.

கொக்குவில் இந்துக் கல்லூரி கிரிக்கெட் ரீமை வளர்த்துவிட்டதில பெரும் பங்கு கேறிபிள்சீக்கு இருக்கு....திறமையானவர்களை இனம் கண்டு கிளப் மட்ச் விளையாடவிடுறது...

கல்லூரி விளையாட்டுவீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை உபயோகிக்க கொடுகிறது  , விளையாட்டு வீரர்களை பயிற்சி கொடுக்கிறது என அவர்களின் பங்கு அளப்பரியது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மகேந்திரன் மாஸ்டர் தேவராஜா மாஸ்டர் பற்குணம் மாஸ்டர் , கல்லூரிப்பழைய மாணவர்கள் முதலி அண்ணர் , ஜெகன் அண்ணர் போன்றோரின் தன்னலமற்ற சேவையை பாராட்டாமல் இருக்கமுடியாது.

யாழ்ப்பாணத்தின் மனம் கவர் கிரிகெட் வீரர்கள்!

எங்கள் கிரிக்கெட் கீரோக்களின் திறமைகளை வழி மெழியும் வகையில் யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் உதயன் பத்திரிகை இரு தடவை நடாத்திய யாழ்ப்பாணத்தின் மனம் கவர் கிரிகெட் வீரன் எனும் கருத்துக்கணிப்பு  பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்....

1989ம் ஆண்டு பின் 1993ம் ஆண்டு என இரு தடவைகள் நடாத்தப்பட்ட இப்போட்டியில்... 1989ம்  ஆண்டு யாழ் இந்துவின் அபி முதல் இடத்தையும் இரண்டாம் இடத்தை கொக்குவில் இந்துவின்  கிருபானந்தன்  கைப்பற்றியதும் பெருமைக்குரியது...

கடைசி திகதிவரை கிருபானந்தன்  முன்னிலையில் இருந்ததும் இறுதி நாள் போட்டி முடிவு அறிவிப்பின்போது உதயன் பக்கச்சார்ப்பாய் நடந்து கொண்டாதாக பல விமர்சனங்கள் அந்நாளில் உதயன் மீது வைக்கப்பட்டாலும் எங்கள் வீரர்கள் தவிர்க்க முடியாதவர்களாக மக்கள் மனங்களிள் நிறைந்திருந்தார்கள் என்பதையே இப்போட்டி கட்டியம் கூறியது....

இதைத்தொடர்ந்து 1993ம் ஆண்டு நடைபெற்ற கருத்துக்கணிப்பு போட்டியில் முதல் மூன்று இடங்களையும் கொக்குவில் இந்து வீரர்கள் கிருபா , சின்னக்கண்ணன் (தணிகேஸ்வரன்), ரஜீவன் எடுத்து யாழ்ப்பாணத்தின் மனம் கவர் கிரிகெட் வீரர்கள் எனும் பெருமையை தனதாக்கிக் கொண்டார்கள்.

இவை 90களில் எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் யாழ்ப்பாணத்து கிரிகெட் இரசிகர் மனங்களை கட்டிப்போட்டு இருந்தார்கள் என்பதற்க்கு இவை சான்றுகள் ஆகும்.

இதை விடவும் கொக்குவில் இந்துவை தான்டி சென் ஜோன்ஸ் காண்டீபன் சென்றல் சுரேஷ் யாழ் இந்து சின்ன வரதன் போன்றோரும் 1993களின் கிரிக்கெட் வீரர்களாக மனதில் நின்றார்கள்....

இது ஒரு கிரிக்கெட் இரசிகனாக எனது பார்வையில் பட்டதை நான் இரசித்தவற்றை பதிவுட்டுள்ளேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் பல பார்வைகள் இருக்கலாம் உங்கள் இரசனையும் என்னொடு ஒத்துப்போகலாம்... 

இல்லை மாறுபட்டிருக்கலாம்... 

சில வீரர்களை தவறுதலாக தவற விட்டிருக்கலாம் .... 

ஒருவரை பாரட்டும்போது அவரை விட சிறந்தவரை  அல்லது அதே தகுதிகளை கொண்ட மற்றொருவரை பாராட்டாமால் விடுவது அவரை தூற்றுவதற்க்கு சமனானது எனும் கருத்தை உடையவன் நான். எனவே இயலுமானவரை என் மனதில் நின்ற 90களின் நிகழ்வுகளை நடுநிலமை தவறாது  இங்கே ஆவணப்படுத்தியுள்ளேன்.....

ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். அனேகமாக இது தான் நான் கொக்குவில் இந்து மைதானத்தில் பார்த்த கடைசி மச்... அதன் பின் இடப்பெயர்வு புலப்பெயர்வு என பல பல மாற்றங்கள்......

காலம் விசித்திரமானது இன்று 07/12/2019 சனிக்கிழமை காலை 8:35 மெல்பேர்னின் புற நகர் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் எனது மகன் விளையாட பார்வையாளர் மண்டபத்தில் இருந்தபடி 25 வருடங்களுக்கு முன்னர் நண்பர்களுக்கு பார்வையாளராய் இருந்த அனுபவங்களை கனடாவில் தாங்கள் வெளியிடும் மலருக்காக எழுதிக்கொண்டிருக்கின்றேன்.... 

அன்று நண்பர்கள் விளையாட அவர்களின் விளையாட்டை ரசித்தேன்... இன்று மகனுக்கு நண்பர்களிடம் கற்றவற்றை ஊட்டிவிட்டு அவன் விளையாட ரசிக்கின்றேன்.....  

கொக்குவில் இந்துவின் கிரிக்கெட் பாரம்பரியம் தலைமுறை தான்டியும் தேசங்கள் கடந்தும் தொடர்கின்றது....



Monday, November 26, 2018

தலைவன் உதித்தான்!

விழிகள் கரைய
இதயம் உறைய
தெருவில் கிடந்தோம்!

வழிகள் நெடுக
குருதி பெருக
செத்துக் கிடந்தோம்!!

நாயின் கிழாய்
காய்ந்த சருகாய்
மிதித்து போனான்!

ஒளியின் வடிவாய்
துணிவின் உருவாய்
தலைவன் உதித்தான்!

வளைந்த முதுகை
தொலைந்த உணர்வை
நிமிர்த்தி எடுத்தான்!

கண்கள் துடைத்து
நெஞ்சை நிமிர்த்தி
தமிழன் நடந்தான்!

எதிரி நடுங்க
உலகம் வியக்க
புதிய சரிதம் எழுதி
மகிழ்ந்தான்!

Monday, April 3, 2017

கடவுளின் மரண வாக்குமூலம்......


சபிக்கபட்ட
இனமென்று
தெரிந்திருந்தும்
உன்னை நிமிர்த்திட
துடித்தேன் நான்.....

யாருக்கும் கிடைக்காத
பொக்கிசமாய்
அர்சுனனை மீண்டும்
உன் குடியில்
பிறக்கவைத்தேன்!
ஆயிரம் ஆயிரம்
அபிமன்யூக்களை
 உனக்கென்று
கொடுத்து வைத்தேன்!

சதுரங்க ஆட்டத்தின்
வித்தைகள் தெரிந்தவனை
உன் கூட்டத்தின்
தளபதியாக்கினேன்!

சுதந்திரத்தின் வாசம்
புரியட்டும் உனக்கு என்று
பறவைகளை உன்
வாசலுக்கு அனுப்பி
வைத்தேன்!

நல்ல எண்ணங்கள் -உன்
புத்தியில் வரட்டுமென
வாசனை மலர்களை
உன் வீட்டு வாசலில்
வைத்தேன்!

கிடுகு வேலிக்குள்
சண்டியனாய்
வளர்ந்தாய் - நீ!

வடக்கென்றும்
கிழக்கென்றும்
தீவென்றும்
வன்னியென்றும்
யாழ்ப்பாணம் என்றும்
பிரிவுகள் பல பேசி
கோமணமும் இல்லாது
அம்மணமாய்
நின்றாய் - நீ!

சாதியென்றும்
மதமென்றும்
தற்பெருமைகள் பேசி
உனக்கு நீயே
மகுடங்கள்
சூடிக்கொண்டாய்!

தலையனை சுகமே
பெரிதென
இருந்தாய்!!
கடவாய் வழிய
படுத்திருத்தல்
சொர்க்கமென
 கிடந்தாய் !!.

அர்சுனர்களின்
ஆட்டம்
உனக்கு சினத்தை
தந்தது!

எவன் செத்தால்
எனக்கென்ன
நான் தப்பினால்
போதும் என
ஓடித்தப்பினாய்...


அர்ச்சுனன் வீரம்
கண்டு
உலமே வியந்து
நின்றது.
உனக்கு மட்டும்
முற்றத்து
மல்லிக்கையின்
மகத்துவங்கள்
புரியவேயில்லை!


கர்ப்பூர வாசனை
தெரியா கழுதையாய்
கிடந்தாய்!!

உனக்காக
உன் பிள்ளைக்காக என
கந்தகம் சுமந்து
நீறாகிபோயினர்
அபிமன்யூக்கள்!!


வாழ்வியலின்
அர்த்தம்
புரியட்டும் என்று
கல்வித்தாயை
வரமாய்
கொடுத்தேன் -உனக்கு.

நீ போதை
தலைக்கேறி
மதம் கொண்டு
திரிந்தாய்!
பிரிவுகள் பல
சொன்னாய்
அடிமையாய் கிடப்பதே
சுகமென கிடந்தாய்!

மெத்தப்படித்த
செருக்கு உனக்கு!
கடவுளே வந்தாலும்
திருத்தமுடியாதென
யாரோ சொன்னது.
நந்திக்கடல் அலையின்
ஓசையிலும்
எனக்கு
நன்றாய் கேட்டது.

உன்னைக் காப்பாற்ற
முடியா விரக்தியில்
நானும் அர்ச்சுனர்களும்
நந்திக் கடலில்
இறங்கி,
தூர நடந்தோம்...
பெரிய அலையொன்று
எங்களை விழுங்கியது.

அர்ச்சுனர் கூட்டம்
அமிழும் நிலையிலும்
தாகத்திற்க்கு
தமிழீழம்
கேட்டது!
கொடுத்துவிடலாம் என
ஒரு கணம் நினைத்தேன்!

திரும்பிப் பார்த்தேன்..

நந்திக்கடலின்
ஆர்பரிப்பில்,
தப்பிய
தறுதலையொன்று

தலையாட்டியாய்
மாறி நின்றது!

எருமைவழிப்
பிறப்பொன்று
சொந்த சகோதரிகள்
மார்புக்குள்
வெடிகுண்டு தேடியது!


இன்னொன்று
செத்த பிணங்களை
புணர்ந்து கொண்டது!

வெள்ளைவேட்டிக்
கனவில்
நாயாய்
நக்கிநின்றது
இன்னொன்று!


நாசமாய் போகெட்டும்
இந்தக் குடியென
மனமார திட்டிவிட்டு
நந்திக்கடலில்
நானும் இறந்தே
போனேன்!

ஆம்
கடவுள் நான்
இறந்துபோனேன்
மே 18இல்!!