Thursday, April 2, 2020

நீண்ட காத்திருப்பு அத்தியாயம்- 01




"சாகரவர்த்தனா"  போர்க்கப்பல்  கொமடோர்  அஜித் போயகொட. 19.09.1994 அன்று  மன்னார் கற்பிட்டிக் கடற்பரப்பில் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகள் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலில் பிடிக்கப்பட்டு எட்டு வருடங்களின் பின்னர் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்டார்.

போயகொட சொல்ல சுனிலா கலபதி எழுதிய A Long Watch என்ற  வரலாற்றுக்குறிப்பு 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூல் தமிழில் தேவாவின் மொழிபெயர்ப்பில் 'வடலி' பதிப்பகத்தின் ஊடாக "நீண்ட காத்திருப்பு" என்ற பெயரில் தற்போது 2020ம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.

எதிரியின் போரியல் தலைவனாக இருந்து பின்னாலில் சிறைப்பட்டு இருந்த சிங்கள போர்ப்படை அதிகாரியாக தனது பார்வையை முன்வைக்கிறார்...

இப்புத்தகம் எதிரியாளர் ஒருவர் தமிழர் போராட்டத்தின் பார்வையாளராக எழுதும் போராட்ட ஆவணம். இப்புத்தகம் எல்லோருக்கும் கிடைக்க வழி இருக்காது என்பதால் தேவாவின் குரலில் ஒலிப்புத்தகமாக வெளியிடுகின்றோம்.

இக் கடற்சமரின் வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள். “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி  மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி  கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன்  ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களை நினைவில் கொள்வோம்.

அத்தியாயங்கள் 1 முதல் 40 வரையான ஒலிப்புத்தகங்கள்

Monday, March 9, 2020

சினம் கொள்


எழில் கொஞ்சும் எங்கள் தாயகத்தை காட்சிப்படுத்திய அழகுக்காக அந்த ஒளிப்பதிவாளர்களின் திறமைக்கு முதலில் ஒரு சலூட். .... வண்ண மயமாய் நெஞ்சை இதமாய் வருடுகிறது அந்த காட்சிகள். கிளிநொச்சியில் தொடங்கி முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் யாழ்ப்பாணம் ,செம்மண் தரவைகள்  , தோட்டவெளிகள் ,கெளதாரி முனை என தாயகத்தின் அழகை ஒளிப்படக்கருவிக்குள் கையகப்படுத்திய அந்த வித்தை மிக அருமை..



எழில் கொஞ்சும் எங்கள் தேசத்தை இதற்க்கு முன் யாரும் இப்படி அழகாய் எந்த போலியும் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள்.... கொள்ளை அழகு ... 

இதற்க்காகதானே இவ்வளவு விலை கொடுப்பும்... 

அகலத்திரையில் அது விரியும் போது மனதில் பொங்கும் மகிழ்வு.... வார்த்தைகளில் சொல்ல முடியா உணர்வு அது

விடுதலைத்தீ முளாசி எரிந்த தேசம் ஒன்றின் வடுக்களை தாங்கி நிற்க்கும் இனம் ஒன்றின் வாழ்வையும் அதன் உணர்வுகளையும் சொல்லும் திரைக்காவியம் இது.



சிறையில் இருந்து விடுதலையாகி வரும் முன்னாள் புலனாய்வு பிரிவு போராளி அமுதன் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் வந்திறங்கும் காட்சியோடு ஆரம்பிக்கும் திரைக்கதை  பல கிளைகளாய் விரிகிறது ..

முன்னால் போராளி குடும்பங்கள்  வறுமையுடன் போடும் போராட்டங்கள், திடீர் காரணம் இன்றிய போராளிகளின் மரணங்கள், அந்த மரணங்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் , புலம் பெயர் முன்னாள் செயற்ப்பாட்டாளர்களின் பொறுப்பற்ற செயல்கள் , அரச அடக்குமுறைக்கெதிரான இன்றும் தொடரும் மக்கள் போராட்டம், சீரழிந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறை என பல கதைகளை தொட்டு நீள்கின்றது இந்த சினம்கொள் திரைக்காவியம்..

எத்தனை இடர்களை சந்தித்தாலும் துவண்டு விடாது நிற்க்கும் விடுதலைப் போராளிகளின் மனத்திடத்தை, தாம் நேசித்த மக்களுக்காக உருகும் போராளியாய் அமுதன், புற்று நோயால் சாகும் போதும் தன் பிள்ளைகளுக்கு உறுதிகூறும் போராளித்தாயாய் யாழினி , ஒரு கையையும் இரு காலையும் இறுதியில் மனைவியையும் இழந்து நிற்க்கும் தமிழரசன் என ஒவ்வொரு காதாப்பாத்திரமும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள் இல்லை வாழ்ந்திருக்கிறார்கள் என்று  தான் கூற வேண்டும். 

அப்படியொரு தத்துரூப நடிப்பு.

வெளி நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருக்கும் முன்னாள் விடுதலைப் போராட்ட செயற்ப்பாட்டாளரிடம் புற்று நோயால் வாடும் முன்னாள் போராளிக்கு பண உதவி கேட்க அவர் பதிலுக்குபொறுப்பு தந்தவர் வந்து கேட்க்கட்டும் திருப்பித்தாறன்எனும் அவரின் பதில் பலருக்கு சாட்டையடி....

"அண்ணையின்ட பிள்ளைகள் நாங்கள் எங்களைப்போய் ,எப்பிடி தவறாய் நினைஞ்சீங்கள்...

என்று அமுதன் தன்னை நியாயப்படுத்தும் போது ஈழத்தமிழனாய் நிமிர்கின்றோம்!.... நேர்மை என்ற அந்த ஒற்றைச்சொல்லை இதைவிட யாரும் தெளிவாய் புரிய வைக்க முடியாது.. தீபச்செல்வனின் வரிகள் அபாரம்.


எம் விடுதலைப் போராட்டத்தையோ, எம் மக்களின் கதையையோ தமிழகத் தமிழர்களால் எக்காலத்திலும் உருவாக்க முடியாது. தமிழகத்தில் இருக்கக்கூடிய படைப்பாளிக்கு அது ஒரு கதை. ஈழத்திலிருந்து வரக்கூடிய இயக்குநருக்கு அது ரத்தமும் சதையுமான வாழ்க்கை. எங்கள் சினிமாவை எங்களால்தானே உருவாக்க முடியும்.”  எனக்கூறும் இயக்குனர் ரஞ்சித்தின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை

அவர் சொன்னது போலவே ரத்தமும் சதையுமான அந்த உணர்வை கச்சிதமாய் திரையில் காட்டி இருக்கிறார்

அன்மைக்காலமாக வெளிவரும் ஈழத்து சினிமாக்கள் தென்னிந்திய சினிமாக்களின் பிரதிபலிபுக்களாகவே இருக்கின்றன. இது மிகப்பெரும் அவலம்...    இந்த போக்குகளில் இருந்து வழுவி  ஈழத்து சினிமாவை கலப்படம் இன்றி தனித்துவமான ஈழத்துக்கான  சினிமாவாக உயிர்பிக்க செய்ததில் சினம் கொள் திரைக்குழு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது எனலாம்.

படம் பார்க்கபோன சிறிய பின்னனிக்கதையுடன் இத்திரைப்படத்தின் வெற்றியை பதிவிடலாம் என நினைக்கிறேன்...

ஞாயிற்றுக்கிழமை ,மெல்பேர்னில்  உள்ள  புறநகர் ஒன்றில் மாலைக் கட்சிக்கு குடும்பமாய் சென்றோம். படம் பார்க்க செல்ல முன்னமே  எனது சின்னவன் சேரன்(7வயது)  அடம்பிடிக்கத்தொடங்கினான்... எனக்கு தமிழ்ப்படம் வேண்டாம். நான் சிறுவர்களுக்கான அன்மையில் வெளியான எதோ ஒரு ஆங்கிலப்படம் தான் பார்பேன் என ஒற்றைக்காலில் நின்றான்.. 

கடைசியாய் தியேட்டரில்  பார்த்த பிகில் தந்த பிகிலாக இருக்கலாம்...

ஒருவாறு சமாளித்து  கூட்டிப்போய் போப்கோன் வாங்கிக் கொடுத்து அவனை சமாதானப்படுத்தி  இருக்கையில் ஒருவாறு  இருந்தால்...


படம் தொடங்க அவனும் தொடங்கினான்!!   ஒவ்வொரு காட்சியிலும் சந்தேகம் கேட்க்க  தொடங்கினான்!!


ஆமிக்காரர் ஏன் சிங்களத்தில கதைக்கினம்?... 

உடைந்திருக்கும் நீர்த்தாங்கி  காட்டி அது என்ன?  அது ஏன் உடைஞ்சிருக்கு....

வற்றாப்பளை அம்மன் கோயில் காட்சியில வந்தவருக்கு , பிறகு என்ன நடந்தது...

அவருடைய குடும்பம் எங்கே?

அமுதனின் சொந்த வீட்டுக்கு என்ன நடந்தது.

தமிழரசனுக்கு ஏன் கையில்லை.... 

யாழினி அக்கா ஏன் இறந்தார்?

மகிழினிக்கு என்ன நோய்?

ஏன் அமுதன் சிறைக்கு போனவர்?

கேள்வி கேட்டு  துளைத்து எடுத்தாங்கள் இருவரும்....  

தீபச்செல்வனை இலகுவாகவே எனது மூத்த மகன் சேயோன் (11 வயது) கண்டு பிடித்தான்... அந்த ஸ்டோர் கீப்பறா  வாறவர் தமிழ் Book Author அல்லவா என வியக்க வைத்தான்....

வீட்டில் உள்ள தமிழ்ப்புத்தகங்களில்  தீபச்செல்வனின்  முகத்தை கண்டதாக சொன்னான்...

அவர்தான் திரைக்கதை பாடல் வரிகள் எழுதியவர் எனும் போது வியந்தான்...

படம் பார்த்து ஒரு கிழமை கடந்தும் சிறுவர்கள் இருவரினதும் கேள்விகளும் , எங்கள் கலந்துரையாடலும் இன்னும் தொடர்கின்றது....

இவ்வளவு கேள்விகளுக்கும் பதில் சொல்லும் போது தான் கவனிதேன் முழுத் ஈழத்தமிழர் வரலாறும் தான் இதற்க்கான பதில்கள்.

ஆயிரம் கதைகளால் கூட செய்ய முடியாததை ஒரு காட்சி ஊடகம்  மிக இலகுவாக புரிய வைக்கும் என்பதை அனுபவபூர்வமாய் உணர்ந்தேன்.

இது தான் சினம் கொள் திரைப்படத்தின் வெற்றி என்பேன்.  


சேரனிடம் படத்துக்கு என்ன ரேட்டிங் கொடுக்கலாம் எனக் கேட்டேன்...   

பத்துக்கு ஒன்பது என்றான்.... 


ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய  கொண்டாட வேண்டிய  திரைக்காவியம் - சினம் கொள்.

Tuesday, January 28, 2020

போரும் வாழ்வும்

போரும் வாழ்வும்

மப்பும் மந்தாரமான வானம் , மழை மேகங்கள் கருக்கட்டி கதிரவனை மறைக்க,  பேறு கால தாய் போல் வீங்கிப்பெருத்திருக்கும் முகில்கள் எப்போதும் மீண்டும் மழை உடைத்துக் கொண்டு கொட்டலாம் என்கின்ற நிலைமை.....

இடையிடையே மேகங்கள் மோதி காதைக்கிழிக்கும் இடியும் மின்னலுமான காலநிலை .... 

கடந்த கிழமை தொடக்கம் பெய்த மழையில் நிரம்பிய குளத்துக்குள் இருந்து தவளைகள் போடும் சத்தம் எரிச்சலை தந்து கொண்டிருந்தது.......

வீதியால் செல்லும் மாட்டு வண்டியில் கொழுவியிருக்கும் அரிக்கன் விளக்கு வெளிச்சம் தவிர வேறோன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை....

A9 கண்டி வீதி ஆள் அரவாரமற்று அமைதியாய் கிடந்தது.....

தனித்திருக்கும் யாரையும் பயம் கொள்ளச்செய்யும் கும்மிருட்டு மணி பின்னேரம் ஆறைத் தாண்டி இருக்காது ஆனாலும் இருட்டுக்கட்டி கிடந்தது மாங்குளம் எனும் சிறு நகரம்!

யாழ்ப்பாண இடப்பெயர்வால் உப்பிப்பெருத்துப்போய் இருந்தது மாங்குளம்.புதிது புதிதாய்  முளைத்த வர்த்தக நிலையங்கள் பொதுமக்கள் குடியிருப்புக்களால்  களைகட்டிக்கிடந்தது மாங்குளம்.

நகரமா அல்லது கிராமமா? இன்னும் தெளிவில்லா ஊர் அது!

கண்டி வீதியில் வன்னியின் மத்தியில் ஒட்டுசுட்டான் ,மல்லாவி ,கிளி நொச்சி ஓமந்தை என வன்னியின் நான்கு முக்கிய நகர்களுக்கு மத்தியில் பரந்து விரிந்து அமைதியாய் கிடக்கும் ஊர் மாங்குளம்....

இந்த நிலத்திற்க்காக உயிர்கொடுத்த பிள்ளைகள் ஏராளம்....

கந்தகம் ஏற்றி வெடித்த மாங்குளம் மண்ணின் மைந்தன் போர்கின் சிரித்த முகம் மாங்குளம் சந்தியை கடக்கும் ஒவ்வொரு தடவையும் வந்துபோகும்...

எத்தனை துனிச்சல்…. தன்னலமில்லா உயிர்க்கொடை... எத்தனை உயர்ந்த உள்ளங்களோடு வாழ்ந்திருந்தோம்!

அந்த புனிதங்களின் மகத்துவம் எத்தனை பேருக்கு அப்போது புரிந்தது என்று தெரியவில்லை!

இபோது புரியும்போது அவர்கள் இல்லை!

எல்லா நினைவுகளையும் தன்னில் தாங்கிய படி காலத்தை வென்று அமைதியாய் கிடக்கிறது மாங்குளம்!

95ம் ஆண்டு யாழ்ப்பாணதில் இருந்து சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை எனும் பெரும் அழிவு துரத்த பாதுகாப்பு தேடி வந்தோருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடைக்கலம் கொடுத்த வன்னிப்பெரு நிலம்!!

எப்போதும் நினைத்துப்பார்துண்டு யாழ்ப்பாணம் நோக்கி வன்னி மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை வந்திருந்தால நாங்கள் இவர்களைப்போல் அவர்களை அன்போடு அரவனைத்திருப்போமா என!

எத்தனை உயர்ந்த மனதோடு மனம் கோணாமல் அரவனைத்து பாதுகாத்தார்கள்!

மாங்குளமும் இடம்பெயர்ந்து வந்தோரால் நிரம்பிவழிந்தது. புதிய புதிய கடைகள் , வைத்திய  நிலையங்கள் , குடியிருப்புக்கள் என ஒரு சிறு நகரமாய் உருக்கொள்ளத் தொடங்கியிருந்த காலம் அது.

கண்டி வீதியும் ஒலுமடு வீதியும் சந்திக்கும் சந்தியில் பழைய மின்சாரசபை வளவு முன்னொரு காலத்தில் இந்திய இராணுவமுகாமாக இருந்த இடம் இப்போது தமிழீழ பொருன்மிய மேம்பாட்டுக்கழகத்தின் வாகன திருத்துமிடமாக மாறி இருந்தது. இது தான் சீலன் எனும்  தர்மசீலனின்  வேலைத்தளம்.


அந்த வளவை மூடி கிளைபரப்பி வளர்ந்திருக்கும் வாகை மரம் அதன் கீழ் ஒரு அறையுடன் கூடிய சிறிய அலுவலகம் வாயிற்காப்பாளருக்கென வாசலில் சிறு தகரத்தால் செய்யப்பட்ட கொட்டில்  மோட்டார்  சைக்கிள் திருத்தும் கொட்டகை   விமானத்தாக்குதலால் இடிந்து கிடக்கும் அயல் வீடு  , யாழ்ப்பாணத்தில் இருந்து கடைசி நாள் இடப்பெயர்வின் போது கிளாலிக் கடற்கரையில் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் , திருத்தம் செய்யவென வந்த  இயக்க வாகனங்கள், முல்லைத்தீவில் இயக்கத்தால் கைப்பற்றபட்ட பெரிய  ட்றக் , ஓமந்தை விவசாயி ஒருவரின் ட்றாக்க்டர்  என  அந்த வளவு வாகனங்களால் நிரம்பிக்கிடந்தது!

இங்கே தான் உதயன் சீலனுக்கு அறிமுகமானான்...  அவன் ஒரு டீசல் எஞ்சின் மெக்கானிக்....

சீலனுக்கு தரப்பட்ட பணி அந்த திருத்த பட்டறையை நிர்வகிக்கும் தொழில்... கணக்கு வழக்கு பார்ப்பதில ஆரம்பித்து மெக்கானிக்மாருக்கு சாவி எடுத்துக்கொடுக்கும் எடுபிடி வேலை தொடக்கம் வேலை செய்பவர்களுக்கும் தனக்கும்   கரிப்பட்டமுறிப்பில் உள்ள உணவுவிநயோக தளத்துக்கு சென்று சென்று (கிட்டத்தட்ட  மாங்குளத்தில் இருந்து 7 மைல்களுக்கு அப்பால் உள்ள இடம்) மதியச் சாப்பாடு எடுத்துவரும் வேலை வரை செய்ய வேண்டும்.....

சீலன் உடைந்து போனான்...

கிறீஷ் படிந்த ஆடையும் அழுக்கு கையுமாக தனது உருவத்தை பார்க்க அவனுக்கே அருவருப்பாய் இருந்தது. ஏன் இப்படி?

இயந்திரவியலாளனாக வரவேண்டும் என்ற இலக்கோடு படித்த மாணவன் , இப்படியானால் யார்தான் பொறுத்துக்கொள்வார்!

சொகுசாக வீடு , கோயிலடி , வாசிகாகசாலை அரட்டல் , விளையாட்டு மைதானம்  என சொகுசாக யாழ்ப்பாணத்தில்  வாழ்ந்த சீலனுக்கு இது புது ஒரு அனுபவம்...தீடிரென வாழ்க்கையை மறுவளமாக புரட்டிப்போட்டது போன்ற நிலைமை...

இடப்பெயர்வால் எல்லாமே விட்டுப்போக குடும்பத்தை காப்பாற்ற ஏதாவது வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலைமை....

இடம்பெயரும் போது எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு வராததால் வேலை எடுப்பதென்பது வன்னியில் முயற் கொம்பு....

எந்த வேலைக்கு இன்ரவியூவுக்கு போனாலும் குறைந்தது நூறு பேராவது இன்ரவியூக்கு வருவாங்கள் இதில  ஒன்டுமே இல்லாத சீலன் தரவழி எங்க எடுபடுறது!

ஏலவல் சோதனை எழுதி றிசல்ட் இன்னும் வரவில்லை மனதுக்குள் கம்பஸ் கிடைக்கும் என்ட ஒரு நம்பிக்கை சீலனுக்கு இருந்திச்சு... இதுக்குள்ள இயக்கத்தின்ட கடைகளிளோ அல்லது ஒபிசுகளிளோ வேலை செய்தா கம்பஸ் கிடைச்சாலும் வன்னியைவிட்டு வெளியில போக ஏலாது எண்டு எல்லோரும் பயப்படுத்தினாங்கள்.....

அவங்கள் சொல்லுறதும் சரி போலத்தான் சீலனுக்கு இருந்திச்சு!

எதுக்கு வம்பு சோதனை மறுமொழி வரும் வரைக்கும் ஏதாவது பள்ளிக்கூடம் அல்லது ரியூட்டறியில மட்டுமே வேலைக்கு போறதென்டு முடிவா இருந்தான் சீலன்.

அக்காலத்தில் வன்னியில் இருந்த ஒரே ஒரு புளுக்கொலர் வேலையான ஆசிரியர் தொழில் தான் அதுதான் எல்லோரினதும் முதன்மை விருப்பத்தேர்வாக இருந்தது!  அதைவிடவும் பெருமையான வேலையென்டா NGO வேலை... அது வேற லெவல்...  அதெல்லாம் கனவிலையும் நினைச்சு பாக்க இயலாது.

பெரும்பாலும் அனேகமானவை வோக்கின் இன்டவியூக்கள்...   நேரடியா நேர்முகத்தெரிவு அன்று போய் கலந்து கொள்ளவேண்டியதுதான்.... போய் வாசலில இறங்கேகயே முடிவு அனேகமாக தெரியும்...

சங்க கடைக்கும் இன்டவியூக்கும் தான் சனம் அதிகம் கூடும்....

எத்தனை நேர்முகத்தேர்வுகளுக்கு சென்றாலும் இறுதியில் நிராகரிக்கப்பட  என்ன செய்வது என்று தெரியாத திரிசங்கு நிலை சீலனுக்கு .....

ஈழநாதம் பேப்பரில வாற ஆட்கள் தேவை விளம்பரங்கள்  ஒன்டும் எதையும் அவன் தவறவிடுவதில்லை...

அவனது வயதை ஒத்த வயது நண்பர்கள் இன்னும் விளையாட்டுப்பிள்ளைகளாக சுத்தித்திரிய இவனது நிலை திடீரென  இவ்வாறு  மாறியதை பெரிய மனதோடு ஏற்றுக்கொண்டான்.

ரியூட்டறி ஆசிரியர் தேவையில் இருந்து பள்ளிக்கூட ஆசிரியர் தேவை வரை எல்லாவற்றுக்கும் விண்ணப்பித்தும் ஒரு வேலையும்  கிடைக்காத வெறுப்பில் வன்னி முழுக்க வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான்...

குடும்ப நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது.... அம்மாவின் நகைகள் ஒவ்வொன்றாய் விற்று முடித்துவிட ... மூன்று வேளை உணவு  இரண்டு  வேளையாய் குறைந்தது.....


வறுமை சீலன் வீட்டு கொட்டிலுக்குள் தாண்டவமாடிக்கொண்டிருந்தது…

எப்படியாயினும் வேலை எடுத்தே ஆகவேண்டிய நிலை….

தம்பி உப்பிடி இருந்து ஓன்டும் செய்யேலாது ஏதாவது கடையில அல்லது சங்கத்தில வேலைக்கு சேர்... வேலையாவது  பழகுவாய்....

என அவனது குடும்ப நிலைமை தெரிந்த உறவினர்கள் அவனை நச்சரிக்க தொடங்கினர்....

இலவசமாய் கருத்து சொல்ல பலர் இருந்தனர்.. ஆனால் அவனுக்கு உதவிசெய்ய எவரும் இருக்கவில்லை....

முருகண்டி ஆலயத்துக்கு அருகில் ஒரு கிருஸ்தவ பாதிருயார் நடாத்தும் தொண்டு நிறுவனம் ஒன்று உள்ளது அங்கு போய் வேலை கேட்டுப்பார் என  எங்கள் கொட்டிலுக்கு பக்கத்து கொட்டிலில் தங்கியிருந்த இளவாலையில் இருந்து இடம் பெயர்ந்திருந்த அலோசியஷ் அண்ணர் சொன்னார்....

அந்த பாதிரியார் நல்லவராம் போய் கதைத்துப்பார்  தம்பி! ஏதாவது உதவிசெய்வார்......

மருமகன் போன கிழமை அங்க போய் கதைச்சு தான் வேலை எடுத்தவன் என்றார் அலோசியஸ் அண்ணர்!

அவரின் பேச்சு நம்பிக்கையை தந்தது!  மனதுக்குள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை சீலனுக்கு துளிர்விட்டிருந்தது.

இரவு புரண்டு புரண்டு படுத்தும் நித்திரை வரவில்லை...  எப்படியும் அலோசியஸ் அண்ணர் சொன்ன இடத்தை போய் முயற்சி செய்து பார்த்த்து விடவேண்டியதுதான்.

கையில் எப்போதும்  கட்டியிருக்கும் கசியோ மணிக்கூடு சிணுங்கியது  நேரம் 6:00 மணி , அம்மா ஈரவிறகோடு அடுப்படியில் போராடிக்கொண்டிருந்தாள்  , வானம் மெல்ல சிவக்க தொடங்கியிருந்தது....    வெளியில் மெல்லிய வெளிச்சம் பரவத்தொடங்கியிருந்தது...   அம்மாச்சி விடிந்தும்  வியாத அந்த வேளையில் முற்றம் கூட்டிக்கொண்டிருந்தாள்....  சீலன் அவசரமாக எழுந்து வெளியே சென்றான்...

வாய்க்காலில் குளித்துவிட்டு, அம்மா ஊத்திய பிளேன் ரீயை அவசர அவசரமா குடித்துவிட்டு, சைக்கிளை எடுத்தான்....

இஞ்ச ஒருக்கா நில்லு தம்பி...என்டு அம்மா சீலனை போகாமல் தடுத்தார்...

என்னனை…

நல்ல விசயத்து போகேக்க பிறத்தால கூப்பிட்டுக்கொண்டு...  அம்மாவை சீலன் சத்தமாக கேட்டான்


இந்தா இதைக்கொண்டு போய் அடைவு வைச்சுட்டு மத்தியானத்துக்கு அரிசி வாங்கிகொண்டு வா! எண்டு ஏதோ ஒன்றை சீலனின் கையில் திணித்தாள்.

நான் உதிலை இரண்டு மாங்காயை புடுங்கி கறிவைக்கிறன்... நேற்று இரவும் சின்னவன் சாப்பிட சோறு இருக்கேல்ல...

எத்தினை நாளைக்கு சாப்பிடாம கிடக்கிறது... அம்மா நிறுத்தாமல் புலம்பினாள்!

என்னனை உது...

அம்மாவின் பழைய கை லேஞ்சியால் கட்டப்பட்டிருந்த சரையை அவிழ்த்துப்பார்த்த்தான் அம்மாவின் தாலி மின்னியது....சீலனுக்கு கோபம் தலைக்கேறியது..


உங்களுக்கு என்ன விசரே பிடிச்சுருக்கு ... கொண்டு போய் உள்ளுக்கு வையுங்கோ என சத்தமாக கத்திவிட்டு அம்மாவின் கையில் தாலியை   திணித்துவிட்டு

அம்மாவின் பதிலுக்கு காத்திராமல் விறுக்கென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு

முருகண்டி நோக்கி பயணமானான் சீலன்....

நிச்சயமாய் தெரியும் அம்மா இப்போது அழத்தொடங்கியிருப்பாள்!  மனது வலித்தது!


எப்படி இருந்த எங்கட குடும்பம் இப்படி ஆச்சே என்கின்ற நின்னைப்பே கண்ணீரை அவனுகுள் வரவழைத்தது...

எப்படியாவது இண்டைக்கு வேலைகிடைக்க வேணும் எனும் ஓர்மத்துடன் அண்ணா சிலை அருகில் இருந்த கோவிலில் கும்பிட்டுவிட்டு சைக்கிளை வேகமாக மிதித்தான் சீலன்.

கட்டாயம் எப்பிடியும் இது கிடைக்கும்..  கிடைச்சா முதல் மாத சம்பளத்தில முருகண்டியானுக்கு  ஒரு தேங்காய் உடைப்பன் என்கின்ற நேத்திக்கடனோட முருகண்டி நோக்கி சீலனின் சைக்கிள் பறந்தது!

அம்பலபெருமாள் சந்திதாண்டி  அக்கராயன் ஆஸ்பத்திரிக்குன் கிட்ட வரேக்க மணியண்ணை அக்கராயன் குளத்துக்கு குளிக்க போய்க்கொண்டிருந்தார்....

எங்க விடியவே கிளப்பிடாய் சீலன்  - எனக்கேட்டார் மணி அண்ணை.

மணியண்ணை வேற லெவல் இவ்வளவு நேர்மையான ஆளை யாரும் வாழ்க்கையில கண்டிருக்க முடியாது. மனைவியை சிறுவயதில் இழந்து தனி மரமாய் இரு பிள்ளைகளோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்....

மனதில் இருந்ததை மணி அண்ணையிடம் கொட்டினான்….. சீலனின் கண்கள் பனித்தன!

பயப்படாத உனக்கு கட்டாயம் வேலை கிடைக்கும் என மணியண்ணை சீலனை உற்சாகப்படுத்தினார், நான் வீட்டுக்கு அரிசி வாங்கி குடுக்கிறன் நீ ஆறுதலாய் கவலைப்படாமா போட்டுவா! என தெய்வம் போல் வார்த்தைகளை உதிர்த்தார் மணி அண்ணை!

அவருக்கும் சீலனுக்கும் எந்தப் சம்பந்தமும் கிடையாது அவர் வன்னியில் ஒரு மூலையிலும் நான் யாழ்ப்பாணத்தின் இன்னோர் மூலையிலும் நேற்றுவரை வளர்ந்தவர்கள்!  இடப்பெயர்வு அவர்களை இணைத்தது ....

ஒரு சில நாள் பழகினாலும் உடன் பிறந்த சகோதரன் போல் உறவு எடுத்துக்கொளவார் மணியண்ணை! நல்ல மனம் படைத்த உயர்ந்த மனிதர்!

அவருக்கு நன்றி சொன்னால் பிடிக்காது! உங்கட யாழ்ப்பாணத்து பழக்கத்தை இஞ்ச காட்டாமல்  மனிசருக்கு மனிசர் உண்மையா இருக்க பழகுங்கோ எண்டு பேசுவார்!

மணி அண்ணையின்ட கையை தனது இரண்டு கைகளாலும் அணைத்துப் பிடித்தான் ... நன்றி சொல்ல வார்த்தை வரவில்லை கதைத்தால் அழுதுவிடுவான் என்பதை சீலன் உணர்ந்திருந்தான்!

மணி அண்ணைக்கு  அது  புரிந்திருக்கும் .. அவர் சிரிப்பில் இருந்து அது வெளிப்பட்டது........

அதற்க்கு மேல் நிற்க்காமல் சைக்கிளை வேகமாக மிதிக்க தொடங்கினான் சீலன். சைக்கிள் கிறவல் பாதையில் புழுதியை கிளப்பிகொண்டு கிளம்பியது...


காலை ஒன்பது மணி இருக்கும் அலோசியஷ் அண்ணை சொன்ன இடத்தை போய் சீலன் போய்ச்சேர்ந்தான்....! 
இடத்தை கண்டுபிடிப்பது இலகுவாகவே இருந்தது . பெரிய பெயர்பலகை வாசலில் தொங்கியது...    வாயில் கதவு திறந்தே கிடந்தது....


வாசலில் வெள்ளை நிற கையஸ் வாகனம் ஒன்று நீல நிறத்தில் அரசசார்பற்ற அந்த நிறுவனத்தின் இலச்சனை பொறித்தபடி எங்கேயோ புறப்படுவதற்க்கு தயாராக்கி கொண்டிருந்தது!

சீலன் மனதுக்குள் தேவாரத்தை முனுமுனுத்தபடி, மனதுக்குள் தைரியத்தை வரவழைத்தபடி....

பாதரை சந்திக்கலாமோ....

வாசலில் நின்ற நடுத்தர வயது மதிக்க தக்க ஒருவரிடம் சீலன் கேட்டான்.

என்ன அலுவல்?..  என்றார் அவர் பதிலுக்கு...

வேலை தேடி வந்திருக்கிறன் என பதில் அழித்தான் சீலன்! பவ்வியமாக...

அக்கா ஏதாவது வேலைக்கு பேபரில விளம்பரம் குடுத்தனீங்களோ என வாசலிலே நின்றபடியே உள்ளுக்குள் இருக்கும் ஓர் யுவதியை நோக்கி கூவினான்!

பதிலுக்கு அறைக்குள் இருந்து யுவதி

உதுகளுக்கு வேற வேலையில்லை…..

விடிஞ்சா பொழுதுபட்டா எத்தனை பேர் வேலை தாங்கோ என்டு வருகுதுகள்!  என ஒருமையில் பதிலளித்தார் அந்த யுவதி!

வாசலில நிக்கிற செக்கி ஐயாக்கு எத்தனை தரம் சொன்னனான் எல்லாரையும் உள்ளுக்க விட வேண்டாம் என்டு என்று அந்த யுவதி கத்திக்கொண்டே வெளியே வந்தார்!

என்ன வேணும் என்றார் இறுக்கமாக!

பாதரை சந்திக்க வந்திருக்கிறேன் என்றான் சீலன்...

பாதர் இப்ப அவசரமா வவுனியா போறார் பிறகு வாங்கோ என்றார்! சொல்லும்போதே பாதர் இன்னொரு அறைக்குள் இருந்து வெளியே வந்தார்!

என்ன பிரச்சனை தம்பி என நேரடியாகவே சீலனைப்பார்த்து கேட்டார் பாதர் ...

பாதர் ஏதாவது வேலை இருந்தா தாங்கோ? குடும்ப நிலைமையை சொல்ல சீலனுக்கு மனது தடுத்தது.

என்ன படிச்சிருக்கிறீர்?

ஏலவல் சோதனை எடுத்துட்டு றிசல்ட்டுக்கு வெயிட் பண்ணுறன்.  என்றான் சீலன்...

தம்பி இஞ்ச கம்பஸ் படிச்ச பெடியளே வேலை இல்லாம திரியிறாங்கள்..... உம்மட தகுதிக்கு இப்ப இஞ்ச ஒண்டும் இல்லை ...

நான் அவசரமா இப்ப போக வேனும் எண்டு சொல்லிவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் வாகனத்தில் ஏறினார்....

சீலனுக்கு தலைசுற்றியது.... விழுந்துவிடுவேன் போல இருந்தது....

ஓவெனக் கதறலாம் போல் இருந்தது!

வாசலில் நின்ற யுவதி ஏளனமாய் பார்த்தாள்.. இதைத்தானே நானும் சொன்னனான் என்று சொல்லிவிட்டு சிரித்தாள்...

அவமானமாய் இருந்தது! அவளைப்பார்க்கால் வெளியேறினான்!!! அவள் வாசலில் நின்ற செக்கிறுட்டி ஐயாவோடு சண்டை இட்டுக்கொண்டிருந்தாள்....

சீலனை உள்ளே விட்ட பாவத்திற்க்கு அந்த வயோதிப ஐயா பேச்சுவாங்கிக்கொண்டிருந்தார்....

கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது!!

வீட்டுக்கு திரும்ப செல்ல மனம் தடுத்தது முருகண்டி பிள்ளையார் கோயிலில் நோக்கி சைக்கிளை மிதித்தான் சீலன்...

இக்கால முருகண்டி போல் அல்லாது வழிப்போக்கர் இளைப்பாறவென சிறு சிறு குடில்களும் திண்ணையும் முருகண்டிப்பிள்ளையார் கோயிலின் பின் வீதியில் அக்காலத்தில் அமைந்திருக்கும்.

அந்த திண்ணையில் சைக்கிளை சாத்திவிட்டு ஓரமாய் சார்ந்து கண்களை மூடி மனதுக்குள் அழுதான்.

என்ன செய்வதென்று தெரியவில்லை ....

எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை.....

விதியை நொந்துவிட்டு... கோயிலிக்கு அருகில் இருந்த  பெரிய தண்ணீர் தொட்டியில் முகத்தை கழுவிட்டு நிமிர்ந்தபோது எதிரே இருந்த  பெரிய கட்டவுட்டில்  தீலிபன் அண்ணா சிரித்தபடி நின்றார்... மரணம் ஒரு தடவைதான் வரும். அதற்காக மானத்தை விற்றுச் சீவிக்கமுடியுமா? எனும் அவரின் வாசகம் ஏதோ ஒன்றை சீலனுக்கு சொல்லுவது போல் இருந்தது.


பயணம் தொடரும்....