Tuesday, March 10, 2009

உயிராயுதங்களாய் கரைந்த உயிர் நண்பர்கள்

மகனைப்பார்த்து எவ்வளவு காலம் இருக்கும் இப்ப எப்படி இருப்பானோ? அம்மாவுக்கு ஏக்கம்.மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்தொடங்கிய போது "புலிக்கு..." என்று புறப்பட்டு போனவந்தான்.அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூடக் காணவில்லை.

இடையில் ஒரு நாள்.....

சண்டை ஒன்றில் மைன்ஸ் வெடித்து பிள்ளைக்கு கால் போய்விட்டதாம் என்ற துயரச்செய்தி அம்மாவின் காதுக்கு எட்டியது.

அம்மாவின் கண்களில் அருவி. வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ? .. அம்மா என்று அழுவானோ?..

அவள் மகனையே நினைத்துக்கொண்டு இருப்பாள். கொஞ்சநாட்களாக அம்மாவின் இரவுகள் தூக்கமற்று நீண்டு கழிந்தன.

காலம் அசைந்தது....

பிள்ளை இப்ப யாழ்ப்பாணத்திலையாம்.... கடற்புலியாக கிளாலியில நிக்கிறாணாம்...

சிங்கள நேவியிட்ட இருந்து சனங்களை காப்பாத்துகிற வேலையாம்....

அவர்கள் அறிந்தார்கள்.

எவ்வளவு காலமாகி விட்டது...? எப்படி இருக்கிறானோ ? மகனைப்பார்க்க அம்மா ஆசைப்பட்டாள். பாசமும் ஆவலும் அவளை அவசரப்படுத்தியது.

சோதனைச் சாவடிகள்.இராணுவக் கெடுபிடிகள். கொச்சைத்தமிழில் துளைத்தெடுக்கும் கேள்விகள்.கிரானில் துவங்கி தாண்டிகுளத்தில் முடிந்த துயரப்பயணத்தின் இறுதியில் அம்மா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தாள்.

மட்டக்களப்பு தொடர்பகத்தில் பெயரை பதிந்து, பிள்ளைக்கு தகவல் அனுப்பிவிட்டு ஆவலோடு காத்திருந்தாள். தங்கியிருந்த வீட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருக்க ஒரு நாள் கடந்து போனது. ஆனால் மகன் வரவில்லை.

கிளாலியில நெவிக்கு கரும்புலி தாக்குதல் நடந்ததாம்... கனக்க நெவியும் முடிஞ்சுதாம்... என்று ஒரு செய்தி மட்டும் வந்தது.

எல்லோருக்கும் சோகம் கலந்த மகிழ்ச்சி. அம்மாவுக்கும் தான்.

மாலையானதும் பரபரப்பாக பேசப்பட்ட அந்தச் செய்தியை தாங்கி "ஈழநாதம்" விசேட பதிப்பு அம்மாவின் கைகளிற்க்கு வந்தபோது......

அந்தப்படங்கள் .......அந்தப்படம்.....!


அம்மா உற்று உற்றுப் பார்த்தாள். கண்கள் இருண்டன.உடல் விறைத்துப் போனது. நம்பவே முடியவில்லை. அம்மாவின் பிள்ளை வரதன்.......?

அவன் தானா என்று பெயரை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஆம் அது அம்மாவின் பிள்ளையே தான். அள்ளி அணைத்து முத்தமிட ஆசையோடு ஓடோடி வந்தாளே..... அதே பிள்ளைதான்.

கறியில்லாமல் , காசுமில்லாமல் அடுப்பெரியாத நாட்களில், "சோறுகாச்சணை கறியோட வாறன் " என்று துவக்கெடுத்துக்கொண்டு காட்டுக்கு போவானே... அதே மகன்!

வீதியில சிங்களப்படை மறித்து, கிறனைட்டை கையில் கொடுத்து "வாயுக்குள்ள போடடா..." என்ற போது , "விருப்பமென்றால் உன்ர வாயுக்குள்ள போடு..." என்று துணிவோடு திருப்பிக்கொடுத்துவிட்டு வந்தானே... அந்த மகன்.

சோகத்தோடு அணைத்து நிற்க்கும் தலைவனுக்கு அருகில் பூரிப்போடு சிரித்துனின்றான். அந்த கரும்புலி.

தாங்க முடியாத பெரும் சுமையாய் துயரம் நெஞ்சை அழுத்த அம்மா அழுதாள்.கவலையை தீர்க்க கண்ணீர் தீரும் வரை அழுதாள்.


கந்தசாமி அய்யாவிற்கும் அம்மாவிற்கும் பிறந்த ஒன்பது குழந்தைகளுக்குள் நான்காவது வரதன். இராமச்சந்திரன் என்பது இயற்பெயர்.

1973 ம் ஆண்டிற்கு பிறகு ,ஒவ்வொரு வருடமும் , தமிழ் புத்தாண்டிற்கு இரண்டு நாள் முன்னதாக வரதனின் பிறந்தநாள் வந்து போகும்.

கல்வியிலும் , விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் மிகுந்தவனாக பள்ளிக்கு போனவனை, அப்பாவோடு வயலுக்கு போகவைத்தது குடும்பநிலை.

குடும்பத்துச் சுமை பகிர்ந்து உழைத்து , 16 வயதுவரை வீட்டோடு இருந்தவனை இயக்கத்துக்கு போக வைத்தது நாட்டு நிலை.

மன்னம்பிட்டிக்கு கிழக்கே 15 மைல் தூரத்திலுள்ள கள்ளிச்சை வடமுனைதான் ஊர். ஆக்கிரமிப்பின் கொடிய வலியை அனுபவிக்கும் தாயகத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்று.

மட்டக்களப்பில் பயிற்சியை முடித்தவனுக்கு அங்கு கண்ணிவெடிப்பிரிவில் பணி.

சிங்களப்படையுடன் மீண்டும் போர் தொடங்கி- வெடி ஓசைகளால் நிறைந்து , நகர்ந்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று, கள்ளிச்சை - வடமுனைக்கும் பெண்டுகல் சேனைக்கும் இடையில் எதிரி விதைத்து விட்டு போயிருந்த மிதிவெடிகளில் ஒன்று விநியோக வேலைகளில் ஈடுபட்டிருந்த வரதனின் வலதுகாலைப் பிய்த்தது.

காட்டு முட்கள் கீறிக்கிளிக்க நரகவேதனையிற்கு நடுவில் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டான் வரதன்.சிகிச்சை முடிய புகைப்படப்பிரிவில் பணி.

கிளாலியில் இருந்த கடற்புலிகலின் தளம்.

எங்கள் அன்புக்கினிய மக்களை ,இரத்தப்பசி கொண்டலையும், இனவாத பேய்களிடம் இருந்து காத்து நிற்க்கும் உன்னத பணியில் அவர்கள். இரவில் விழித்திருந்து அலைமடியில் காவல்.பகலை இரவாக்கி தூங்கமுயலும் வாழ்வு.

முகாமில் எப்பொழுதும் கலகலபை நிறைத்திருப்பவன் மதன் தான்.துடி துடிப்பான சுபாவம் அவனுடையது.வரதனும் மதனும் உற்ற நண்பர்கள்.புகைப்படப்பிரிவில் ஒன்றாக வேலை செய்தபோது மெல்ல அரும்பிய உறவுதான் - இன்று உயிருக்கு உயிரான சிநேகிதமாக இறுக்கம் பெற்றிருந்தது.


ஒன்றாக தலைவருக்கு கடிதம் எழுதி, ஒன்றாக கடற்புலிகளுக்கு வந்து ,ஒன்றரை கால்கலோடு நீந்தப் பழகி, பயிற்சி பெற்று, படகேறி , கடலில் களமாடி ,ஒன்றாக கிளாலியிலும் பணி செய்தவர்கள், ஒன்றாக கரும்புலிக்கும் பெயர் கொடுத்தவர்கள். இறுதியிலும் ஒன்றாகவே போனார்கள்.

மதன் துடி துடிப்பானவன். ஒற்றைக்காலில் கூத்தாடி... ஊன்று தடியோடு துள்ளியோடி... கும்மாளம் அடித்தபடி திரிந்து.. அவன் ஓய்ந்ததே இல்லை.

திருமலை காட்டில் மிதிவெடி ஒன்று கழட்டிவிட்ட இடதுகாலுக்கு பதிலாக ஜெய்ப்பூர் கால் கொளுவப்பட்டிருந்தது.பொய் காலை கழட்டிவிட்டு ஒன்றரை காலில் மரத்தில்லேறி மாங்காயும் ,இளநீரும் பிடுங்கித்தந்து, எங்களோடு சேர்ந்திருந்து சாப்பிட்டு மகிழ்ந்த உன்னத நண்பன் அவன்.

இரவெல்லாம் படகோடி, கடலில் சமராடிவிட்டு, பகலில் தூங்க முயலும் தோழர்களை ஊன்றுதடியால் தட்டிக் குழப்பித்தொந்தரவு செய்துவிட்டு.துள்ளி ஓடி அவர்களின் அன்பான சினப்பிற்க்கும் அளாகின்றவன் அந்த குழப்படிகாரன்.அவன் கூட தானும் இரவு சண்டைக்கு போயிருப்பான் அனாலும் பகலிலும் ஓடித்திரிவான்.

சண்டைக்கு தயாரான ஓடுபாடுகள் இல்லாத ஓய்வான ஒரு மாலைப்பொழுதில் - மதன் ஒரு தென்னை மர அடியில் சாய்ந்திருப்பான்.கடற்காறோடு கலந்து ஒரு பாடல் விரியும்.தன்னுடையது பாடுவதற்கேற்ற ஒரு குரல் இல்லையென்பது தெரிந்திருந்தும் அவன் பாடுவான். அதில் ஒரு கவர்ச்சி இருக்கும்...அருகில் இருப்பவர்களை ஈர்க்கும்.

எப்போதும் எதிலும் கவனமில்லாத ஒருவனைப்போல் பகிடி சோல்லித்திரிகின்ற மதன், தனது திறமையை வேலைகளின் போது செயலில் காட்டுவான்.எங்களால் செய்யமுடியாமல் போகிற சில சில வேலைகளை, ஒரு காலை இழந்தவனாய் இருந்தும் அவன் செய்துமுடிப்பான்.பெரும்பாலும் தவறுகள் செய்யாமலே இருக்கிற மதன் , சக தோழர்கள் தவறு செய்யும் போது சொல்லித் திருத்துகின்ற போராளி.

மதனுகிருந்த இயழ்பான குழப்படித்தனத்தால், வரதனோடு தோடங்கிய ஒரு பகிடிச்சண்டை சீரியஸாக முடிந்தது.அந்த உயிர் நண்பர்கள் கதைக்காமல் பிரிந்து போய்விட்டார்கள்.

அடுத்த 24 மணி நேரம் வெறுப்பூட்டுவதாக கழிந்தது.

வரதன் குளிக்கப்போனான்.எப்போதும் இருவரும் சேர்ந்தே போவார்கள்.இப்போது வரதன் தனியே.முகத்தைதொங்கப் போட்டுக்கொண்டு மதன் ஒரு மரக்குத்தியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான்."போ" என்று நட்புத் தூண்டவும் தன்மானம் தடுத்தது.அனாலும் அன்பே வென்றது. ஊன்றுதடியுடன் துள்ளிக்கொண்டு முந்தி ஓடிப்போய் வாளியை எடுத்து வரதனுக்கு குளிக்கவார்க்கத்தொடங்கினான்.சேரனிடம் இதைசொல்லும் போது வரதனின் கண்கள் பனித்திருந்தன.

வரதன் அமைதியானவன்.அதிகம் பேசத் தெரியாதவன்.கதைகளை விட செயல்களிலேயே அதிக ஈடுப்பாடும் நம்பிக்கையும் கொண்டவன்."கதைக்கும் போதெல்லாம் இயக்கத்திற்க்கு எதாவது பயன்படக்கூடியதாய் கதையுங்கோடா.." என்று எங்களுக்கு புத்தி சொல்பவன்.அது வெளியில் தெரியாமல் தனக்குள் குமுறிக்கொண்டிருந்த எரிமலை.

அம்மா அப்பாவை பிரிந்து, உறவுகளை பிரிந்து நீண்ட காலம் எங்கு இருக்கின்றார்களோ...? ஆமிப்பிரச்சனைகளால் ஓடுப்பட்டுத் திரிகின்றார்களோ...? வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதிப் பார்ப்பம் என்ற ஆவல் வரதனுக்கு எழுந்தது.

வரதன் கடிதம் எழுதினான்.பதிலுக்காகக் காத்திருந்தான். அடுத்த தரம் எழுதினான்; காத்திருந்தான். பதிலில்லை ,மூன்றாம்தரம் - பதிலில்லை.நான்காவது கடிதமும் போனது; பதில் வரவே இல்லை.

இடம்பெயர்ந்து வந்து கிளாலியில் இறங்கிய உறவினர்கள் சிலரை எதிர்பாராமல் வரதன் சந்திக்க நேர்ந்தது. "ஒரு இரவு ஊருக்குள்ள ஆமி புகுந்து வெட்டியும், சுட்டும் நூற்றுக் கணக்கில் சனங்களை கொண்டவங்கள் தம்பி.

...தப்பி ஓடிவந்த எங்களுக்குள்ள உன்ரை வீட்டுக்காரர் வரேல்லை.... என்ன நடந்ததோ....? கடவுளுக்குத்தான் தெரியும் !" வானத்தைப் பார்த்து கைகளை விரித்துச் சொல்லிவிட்டு, ஒரு பெருமூச்சோடு அவர்கள் போய்விட்டார்கள்.

காதுகளில் இடியென இறங்கிய செய்தியால் அவன் துடித்துப்போனான். ஏற்கெனவே அவனுக்குள் வீசிக்கொண்டெழுந்தது. ஆனாலும் அது ஒரு வதந்தி மட்டுமே என்பது கடைசிவரை அவனுக்குத் தெரியாமலே போய்விட்டது.

கிளாலியின் விரிந்த கடல்.

தமிழர்களின் இரத்தமே அலைகளாய் அசையும் 20 மைல் நீளச் செந்நீர்ப்பரப்பு.

இரத்தப்பசிகொண்டு அலையும் சிங்களப் படை. உயிர் விழுங்கும் துப்பாக்கி வாய்களோடு காத்து நிற்க்கும் மரணவலயம். அந்த மரண வலயத்திலும் - கடலரண்களாய் கடற்புலிகள் காவல் நிற்க, எங்கள் மக்கள் துணிவுடன் பயணிக்கும் குடாநாட்டுக்கான தனியொரு பாதை.

நாகதேவன் துறையில் பொருத்தப்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த ராடர்களின் திரையில் புள்ளிகளாய் அசையும் எங்கள் படகுகளை, துல்லியமாக இனம் கண்டு தாக்கி மூழ்கடிக்க விரைந்துவரும் எதிரிப் படகுகளை, உள்ளங்கையைக் கூட பார்க்க முடியாத கும்மிருட்டிலும் கூட, கண்களை மட்டுமே நம்பி எதிர்கொண்டு விரட்டியடிக்கும் சாதனைக் களம்.

எதிரி தடை செய்த வலயத்தை எதிரிக்குத் தடை செய்து வீர சாதனை படைக்கும் கடற்புலிகளின் போர்திறனையும், அதனை பிரமாண்டமான ஒரு வளர்ச்சி நிலையை நோக்கி உயர்த்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் முயற்சியையும், ஆற்றலையும் உலக அரங்கில் பறைசாற்றிக்கொண்டிருந்த போர்முனை.

கிளாலிக் கடலில் மக்கள் போக்குவரத்துச் செய்ய்த்துவங்கிய நாளிலிருந்து அங்கு பணியாற்றிக்கொண்டிருக்கும் கடற்புலிகளின் அணி, வரதனையும் மதனையும் கொண்டிருந்து.

அந்த கடற்களத்தில் புலிகள் எதிரியைச் சந்தித்த ஒவ்வொரு சண்டையிலும், இவர்களின் கைகளிலிருந்த துப்பாக்கிகள் கனன்றிருக்கின்றன.

விடிகாலைகளில் , பயணம்போன எம்மக்கள் செத்தபிணங்களாய்க் கரையொதுங்கிய போதெல்லாம், அவர்களுக்குள் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டெரியும்.

அவர்கள்,துணிகரமான சண்டைக்காரர்கள். அவர்களுடைய வண்டிகளில், எதிரியின் படகுகளை மூக்குக்கு நேரே எதிர்கொண்டு அவனை திகைப்பிலாழ்த்துவார்கள். கண்ணைக்கட்டி இருளில் விட்டது போன்ற இருட்டிலும் எதிரியின் படகுகளை இனம் கண்டு நல்ல வியூகங்களில் தளம்பலின்றி வண்டியைச் செலுத்தி- அவனைத் தாக்கி திணறடிப்பார்கள். அந்த மயிர்க்கூச்செறியும் கணங்களில் எதிரி தலை தெறிக்க ஓட்டமெடுப்பான். அந்த நேரங்களில் அவர்கள் சொல்வார்கள்: "இப்ப மட்டும் ஒரு சக்கை வண்டி இருக்குமெண்டால், இவங்களின்ரை கதை இதிலையே முடியும்"

அவர்கள் ஒரு கரும்புலித் தாக்குதலுக்காக காத்திருந்தார்கள்."எங்களின் மக்களைக் கொன்றொழித்தவர்களை இதே கடலில் வைத்துக் கொன்றொழிக்க வெண்டும்.என்ற வீர சபதம்.அவர்களின் இதயங்களில் முழங்கிகொண்டிருந்தது. கரும்புலித் தாக்குதலை நடாத்தும் இரவ, அவர்கள் எதிர்பார்த்திருந்தர்கள்.

"ஏன் கரும்புலியாகப் போகின்றீர்கள்?" என்பதற்கு , ஒரு தத்துவார்த்த விளக்கத்தை அளிக்கக்கூடிய அறிவை அவர்கள் பெற்றிருக்கவில்லையாயினும், அதன் தேவையை - அதன் முக்கியத்துவத்தை - அதன் பலத்தை - உளப்பூர்வமாகவும் தெளிவாகவும் உணர்ந்துகொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

வரதன் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருப்பான். அருகில் போகிற நண்பனிடம் "தலைவர் சொன்னதையே நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன்.எனது சிந்தனையெல்லாம் அதிலையே இருக்கு.அந்த ஒரு நொடிப்பொழுதுக்காக நான் எவ்வளவு காலமும் காத்துக் கொண்டிருப்பன். என்றொ ஒரு நாள் கிளாலிக் கடலில் ஒரு 'வோட்டர் ஜெட் ' நொருங்கும் " என்பான்.


மதன் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். சீனிவாசன் சிவகுமார் என்பது அவனுடைய இயற்பெயர்.1975 ஆம் ஆண்டு , செப்ரெம்பர் திங்கள் 7ம் நாள், அந்த வீர மைந்தனைப் பெற்றாள் ஒரு வீரத்தாய்.

குடும்பத்தில் மூன்று அண்ணன்களுக்கும், ஒரு தங்கைக்கும் இடையில் அவன், மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் 9 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது 1989 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு நாள், பள்ளிக்கூடத்திற்கென்று புறப்பட்டுப்போனவன் திரும்பிவரவில்லை."இயக்கத்துக்குதான் போயிருப்பான்..."

என்ற வீட்டிலுள்ளவர்களின் ஊகிப்பும் பிழைத்துவிடவில்லை.

கிளாலியின் கடற்போர் முனை. எறக்குறைய 60 நாட்கள் அலைகள் போல அசைந்து கடந்துவிட்டன.

அந்த உயரிய சாதனையை நிகழ்த்த அவர்கள் கடலுக்கு போய்ப்போய்த் திரும்பி வரவேண்டியிருந்தது. நாட்செல்ல செல்ல அவர்களுடைய உறுதி இறுகிக்கொண்டே போனதேயன்றி, இளகியதில்லை.

ஒவ்வொரு தடவையும் சண்டை துவங்கும். துப்பாக்கிக் குழாய்கள் சிவக்க எங்களது படகுகள் பகைவனை எதிர்கொள்ளும். 'சக்கை' வண்டி அவனை மின்னலென நெருங்கும்.எதிரி ஓட்டம்மெடுப்பான்.சக்கை வண்டி கலைக்க இடைவெளி குறுகும்.எதிரியின் வேகம் கூடும்.அதிகரித்த வேகத்தோடு சக்கை வண்டி அண்மிக்க, ஒரு அடி உயர நீரில் ஓடக்கூடிய தன் நவீன படகை எதிரி ஆழம் குறைந்த நீர்ப்பரப்பின்னூடு செலுத்துவான்.சக்கை படகுகள் தரை தட்டும். தொடர்ந்து கலைக்க முடியாமல் திரும்ப வேண்டியிருக்கும். மறுநாள்......

முகாமின் ஒரு மூலையில் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு இருப்பார்கள்.இரவு தங்களால் இடிக்க முடியாமல் போய்விட்டதே என்பதற்காக, அவர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்.

61 நாட்களும் இப்படித்தான் நகர்ந்தது.

25.08.19993

வழமையான இரவு.

நிலவு உலா வராத இருண்ட வானம்... சிலிர்ப்பூட்டும் குளிர்....

உடலுக்கு அசதியைத் தந்தாலும், உள்ளத்திற்க்கு உற்சாக்மூட்டும் உவர்காற்று... கடற்புலிகள் காவல் உலா வர மக்களின் பயணம் துவங்கியது.சக்கை நிரப்பிய "புலேந்திரன்" "குமரப்பா" வில் மதனும் வரனும் தயாராக நின்றார்கள்.

கடந்துபோனவைகளைப் போல அல்லாமல் இந்த இரவில், அவர்களின் முகங்களில் நம்பிக்கையின் தெறிப்பு, இனம்புரியாத பூரிப்பு.அருகில் நின்ற கண்ணாளனிடம் குப்பியைக் கழற்றிக்கொடுத்து விட்டு மதன் சொன்னான் "இண்டைக்கு இடிச்சே தீருவன்.திரும்பி வரமாட்டன்."

நேரம் நடு இரவைத் தாண்டியிருந்தது.நாகதேவன் துறைத்தளத்திலிருந்து அலைகளைக் கிழித்துக்கொண்டு முன்னேறினான். எதிரி. இன்று அவனுடைய தாக்குதல் வடிவம் வித்தியாசமானதாக இருந்தது.

ஒவ்வொரு தடவையும் மாறுபட்டதாக இருக்கின்ற போதிலும் இன்று அவன் அமைத்து வந்த வியூகம் புதுவிதமானது. இரண்டு அணிகள். ஒன்று ஒரு புறத்தில் புலிகளைத் தடுக்க , மற்றையது மறு புறத்தில் மக்களைத் தாக்கும்.

ஆனால், பகைவன் சற்றும் எதிர் பாராதவிதமாக அவனை இருமுனைகளில் எதிர்கொண்டனர் கடற்புலிகள். துப்பாக்கி முனைகள் தீ உமிழ, வானம் விழாக்கோலமானது.

சண்டை உக்கிரமடைந்ததுகொண்டிருந்த ஒரு கட்டத்தில், காத்திருந்த 'புலேந்திரன்' படகை 'வோக்கி' அழைத்தது. மதன் ஆவலோடு பதில் கொடுத்து , கட்டளைக்கு காதுகொடுத்தான்.

மக்களைத் தாக்கவந்த எதிரி, புலிகளிடம் சிக்கிப்போயுள்ள முதலாவது சண்டை முனையில் ஏற்ககெனவே விளங்கப்படுத்தப்பட்டிருந்த தாக்குதல் திட்டத்தின்படி - 'வோட்டர் ஜெற்' படகொன்றைத் தாக்குமாறு வோக்கி கூறியது.

சுற்றியிருந்த தோழர்கள் கண் கலங்க, சிரித்த முகத்தோடு மதன் புறப்பட்டான். மின்னல் கீற்றென நெருங்கிய கரும்புலிப் படகைக் கண்டு எதிரி தப்பி ஓட முயல, அதற்கு அவகாசமில்லாமல் , மதன் அதன் மையப்பகுதியோடு மோதினான். பிரகாசித்தெழுந்த ஒளி வெள்ளம் மறைந்து , இருளோடு இருளாகக் கரும்புகை கரைந்தது கொண்டிருக்கும்போது, இரண்டாகப் பிளந்து மூழ்கிக்கொண்டிருந்த 'P115' இலக்க 'வோட்டர் ஜெற்' றிலிருந்து புலிகள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

தான் நேசித்த கடலோடும்..... காற்றோடும்..... எங்கள் மதனும்..... அவனது 'புலேந்திரனும்'.

அந்த கடற்களம் நீண்டுகொண்டிருந்தது. கடற்புலிகள் கடலில் சந்தித்த முதலாவது பெருஞ் சமர் அதுவாகத்தான் இருக்கமுடியும்.புலிகளைத் தாக்க வந்த அணியை புலிகள் தாக்கிக்கொண்டிருந்த இரண்டாவது முனையிலிருந்து, 'குமரப்பா' படகிற்க்கு அழைப்பு வந்தது. காத்துக்கொண்டிருந்த வரதன், களத்திற்க்கு விரைந்தான்.

புலிகளின் சண்டைப்படகுகளால் வளைக்கப்பட்ட நிலையில் ,தப்ப வழியின்றி தளத்துக்குத் தகவல் அனுப்பிவிட்டு உதவி வரும் வரை சண்டையிடத் தீர்மானித்து விட்ட ஒரு 'வோட்டர் ஜெற்' படகு , வரதனின் இலக்கு. 'வோக்கி' அவனுக்கு தாக்குதல் வழிமுறையை வழங்கியது.உதவி கிடைக்குமுன் அதனை உடைக்க வேண்டும்.



இருள் ஆளை ஆள் பார்க்க முடியாத இருள், வளைத்து நிற்க்கும் புலிகளின் படகுகளை அவதானித்து - விலத்தி ஓடி , 'வோட்டர் ஜெற்' றை சரியாக இனம் கண்டு - அது அவனுடையதுதான் என்பதை உறுதிப்படுத்தி இடிக்க வேண்டும். தவறுதலாக எங்களுக்குள் முட்டுப்பட்டாலோ விளைவு விபரீதமானதாக மாறிவிடும்.

சரியான இலக்கை நோக்கி, வரதன் நெருங்கினாந் அதிகரித்த வேகத்தோடு. திகைத்த எதிரி எதுவுமே செய்யமுடியாமல் மலைத்துப்போய் நிற்க , அடுத்த கணப்பொழுதில்...! அந்தக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்...!

எதிரியின் படகு.... எங்கள் அன்பு வரதனும் 'குமரப்பா' வும் தான்......

நாகதேவன் துறையிலிருந்த கடற்படைத் தளத்தில் தகவல் தொடர்பு சாதனம், 'P121' என்ற தங்கள் போர்படகை அழைத்துக்கொண்டிருக்க, மூழ்கிக்கொண்டிருந்த அந்தப்படகிலிருந்து, கடற்புலி வீரர்கள் ஆயுதங்களை எடுத்துமுடித்துவிட்டார்கள்.

ஒரே பாயில் படுத்து, ஒரே கோப்பையில் சாப்பிட்டு, அளுக்காள் தண்ணி ஊற்றி- ஊத்தை தேய்த்து ஒன்றாகவே குளித்து, ஒரே இலட்சியத்திற்காக வாழ்ந்த அந்த உயிர் நண்பர்கள் - கிளாலிக்கடலில் நடந்த ஒவ்வொரு சண்டையின்போதும், ஒன்றாகவே நின்று, சிங்கள பிணந்தின்னிகளை நெருப்பெனச் சுட்டெரித்தவர்கள் சாகும்போது கூட ஒன்றாகவே போனார்கள்.

எங்களுக்காக...... மக்களுக்காக......